அவர் ஒன்னும் அவ்ளோ பெரிய ப்ளேயர் இல்ல – சர்ச்சைக்கு உள்ளான இளம் வீரரை விளாசும் முன்னாள் வீரர்

Parag-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் தனது முதல் வருடத்திலேயே வென்று சாதனை படைத்துள்ளது. மே 29இல் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்று அசத்தியது. அதே போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் 2008க்குப் பின் கோப்பையை முத்தமிட கிடைத்த பொன்னான வாய்ப்பை தோல்வியடைந்து நழுவ விட்டது. அந்த அணிக்கு இந்த வருடம் முழுவதும் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் தவிர வேறு யாருமே தொடர்ச்சியாக ரன்களை எடுக்கவில்லை என்றே கூறலாம்.

Riyan Parag 56.jpeg

- Advertisement -

அந்த அணிக்காக விளையாடி வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம் வீரர் ரியன் பராக் பீல்டிங்கில் 17 கேட்சுகள் பிடித்து ஒரு சீசனில் அதிக கேட்ச்கள் பிடித்த இந்திய வீரராக புதிய சாதனை படைத்தார் என்றாலும் முக்கிய துறைகளான பேட்டிங் – பவுலிங் என எதிலுமே சிறப்பாக செயல்படாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த இளம் வயதில் அவர் பெரிய அளவில் சிறப்பாக செயல்பட்டு சாதிக்க முடியாதது பெரிய ஆச்சரியமில்லை என்றாலும் இந்த வயதிலேயே தன்னை விராட் கோலியை போல நினைத்துக் கொண்டு உலக சாதனை படைத்தது போல அவர் பேசும் பேச்சுக்கள் தான் யாராலும் தாங்க முடியவில்லை.

பராக் பரிதாபங்கள்:
கடந்த 2019 – 2021 வரை ராஜஸ்தான் அணியில் 20 லட்சத்துக்கு விளையாடி வந்த அவர் அந்த 3 வருடங்களில் 1 அரை சதம் மட்டுமே அடித்தார். இருப்பினும் இந்த வருடம் அவரை 3.8 கோடி என்ற பெரிய தொகைக்கு ராஜஸ்தான் மீண்டும் வாங்கிய அனைத்துப் போட்டிகளிலும் வாய்ப்பளித்த போதிலும் பங்கேற்ற 17 போட்டிகளில் வெறும் 183 ரன்களை 16.64 என்ற தரைமட்டமான பேட்டிங் சராசரியில் எடுத்துள்ளார். குறிப்பாக இறுதி போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய நிலையில் அதிரடியாக பேட்டிங் செய்யாத அவர் தோனியை போல் சிங்கிள் எடுக்காமல் சிக்ஸர் மட்டும்தான் அடிப்பேன் என்று அடம் பிடித்தது பலரையும் அதிருப்தியடைய வைத்தது.

Riyan Parag Catch

இப்படி களத்தில் சுமாராக செயல்படும் இவர் தமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்காத அம்பயரை கலாய்த்தது, அதற்காக இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹைடனை மறைமுகமாக ஏளனமாகப் பேசி ட்வீட் போட்டது என அவரின் வயதுக்கு மீறிய செயல்கள் ரசிகர்களை தொடர்ந்து கோபமடைய வைத்து வருகிறது. அதனால் வாய் மட்டும் பேசாமல் களத்தில் சிறப்பாக செயல்பட்டு காட்டுமாறு அவரை ரசிகர்கள் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் தினந்தோறும் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

பெரிய பிளேயர் இல்ல:
இந்நிலையில் ரியான் பராக் அவ்வளவு பெரிய பிளேயர் இல்லை என்று விமர்சித்துள்ள முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் மதன்லால் 4 வருடங்களில் அவர் கொஞ்சம் கூட முன்னேற்றம் அடையவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். இது பற்றி 1983 உலக கோப்பையை வென்ற அவர் பேசியது பின்வருமாறு. “ரியன் பராக் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார். ஆனால் ஒரு போட்டியில் கூட சிறப்பாக செயல்படவில்லை. அவர் போட்டியை தலைகீழாக மாற்றக்கூடிய அளவுக்கு பெரிய வீரர் கிடையாது. மேலும் ஐபிஎல் என்பது எத்தனையோ இளம் சிறிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்து முன்னேற்றி பெரிய வீரர்களாக மாற்றியுள்ளது.

Madan Lal

“ஆனால் இந்த வீரர் (ரியன் பராக்) இத்தனை வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதில் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காணவில்லை. அதிலும் அவர் விளையாடும் லோயர் மிடில் ஆர்டர் இடம் டி20 கிரிக்கெட்டில் முக்கியமானதாகும். ஏனெனில் அந்த இடத்தில் தான் நீங்கள் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்கள் அடிக்க வேண்டிய நிலை ஏற்படும். உங்களால் அந்த இடத்தில் ரன்கள் எடுக்க முடியவில்லையெனில் வெற்றி பெறுவது கடினமாகிவிடும்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல வரலாற்றில் எத்தனையோ இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு உருவாகி வருகிறார்கள். ஆனால் இவர் கடந்த 4 வருடங்களாக கிடைத்த 47 போட்டிகளில் 37 இன்னிங்சில் களமிறங்கி வெறும் 2 அரைசதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். இத்தனை வாய்ப்புகள் கிடைத்தும் முன்னேறாமல் இருக்கும் இவரை போன்ற வீரரை இதற்கு முன் பார்த்ததில்லை என்றும் மதன் லால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : வீணாகாத உழைப்பு ! வரலாற்றில் தனித்துவமான சாதனையுடன் பட்லர் வென்ற 37 விருதுகளும் – பரிசுகளும் இதோ

இருப்பினும் அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ள ராஜஸ்தான் அணி நிர்வாகம் அடுத்த வருடம் அவருக்கு ஸ்பெஷலான பயிற்சிகளைக் கொடுத்து நல்ல வீரராக மாற்றுவதற்கு முயற்சிக்க உள்ளதாக அதன் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா இறுதிப் போட்டிக்குப் பின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement