IND vs AUS : கேப்டன் இப்படியா நடந்து கொள்வது – டிகே மீது கோபத்தை காட்டிய ரோஹித்தை விளாசும் ரசிகர்கள்

Rohit Sharma Dinesh Karthik Umesh Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேஎல் ராகுல் 55 (35) ரன்கள் சூர்யகுமார் யாதவ் 46 (25) ரன்கள் ஹர்திக் பாண்டியா 71* (30) ரன்கள் என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக செயல்பட்டதால் 20 ஓவர்களில் 208/6 ரன்கள் சேர்த்தது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஆரோன் பின்ச் 22, ஸ்டீவ் ஸ்மித் 35, கிளன் மேக்ஸ்வெல் 1 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் இளம் தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அதிரடியாக 61 (30) ரன்கள் எடுத்தார்.

அவரது ஆட்டத்தை வீணடிக்காத வகையில் கடைசியில் அதிரடி காட்டிய மேத்யூ வேட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (21) ரன்கள் குவித்து பினிஷிங் செய்து இந்தியாவை தோற்கடித்தார். இதனால் நம்பர் 1 டி20 அணியாக இருந்தும் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய இந்தியா இத்தொடரின் கோப்பையை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்நிலையில் தலை நிமிர எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

கோபமான ரோஹித்:
இப்போட்டியில் பேட்டிங்கில் குறை சொல்ல முடியாத அளவுக்கு 208 ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் போராட்டத்தை பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கி இந்திய பவுலர்கள் வீணடித்தார்கள். மேலும் சம்பந்தமின்றி 3 வருடங்கள் கழித்து உமேஷ் யாதவை கொண்டு வந்தது, மீண்டும் புவனேஸ்வர் குமாரை 19வது ஓவரில் பயன்படுத்தியது போன்ற ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் இந்த போட்டியில் சுமாராக இருந்தது. அத்துடன் பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் சரியான நேரத்தில் சரியாக பயன்படுத்தாத அவர் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையான கோபங்களை வெளிப்படுத்தினார்.

அதிலும் குறிப்பாக உமேஷ் யாதவ் வீசிய 12வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் எட்ஜ் கொடுத்த போது அதை தினேஷ் கார்த்திக் கச்சிதமாக பிடித்தும் நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததால் இந்தியா டிஆர்எஸ் எடுத்ததில் சாதகமான முடிவு வந்தது. அதே ஓவரில் அடுத்து களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் எட்ஜ் கொடுத்ததை மீண்டும் தினேஷ் கார்த்திக் சரியாக பிடித்தும் நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார். மீண்டும் அதை ரிவியூ செய்தபோது இந்தியாவுக்கு சாதகமான முடிவு கிடைத்தது. அப்படி ஒரே ஓவரில் அடுத்தடுத்த முக்கிய விக்கெட்டுகளை எடுத்ததை இந்திய வீரர்கள் கொண்டாடினார்கள்.

- Advertisement -

அப்போது இருந்த பரபரப்பில் உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியாத கேப்டன் ரோகித் சர்மா கேட்ச்களை சரியாக பிடித்தும் தினேஷ் கார்த்திக்கை திட்டுவது போன்ற உணர்வுகளையும் பேச்சுக்களையும் வெளிப்படுத்தினார். அதோடு நிற்காத அவர் அவருடைய கழுத்தையும் தாடையையும் பிடித்து திட்டுவது போல் உணர்வுகளை வெளிப்படுத்தினார். இதை அவர் விளையாட்டாக செய்தாலும் சக அணி வீரரிடம் பரபரப்பான தருணத்தில் இவ்வாறு நடந்து கொண்டது நிறைய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் ஒருமுறை இப்படி செய்தால் பரவாயில்லை நிறைய முறை சக வீரர்களிடம் பொறுமையை காட்டாமல் அவர்களை திட்டுவதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். முதலாவதாக கடந்த வருடம் புவனேஸ்வர் குமார் ஒரு கேட்ச்சை விட்டதற்காக பந்தை எட்டி உதைத்த அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் முக்கிய நேரத்தில் அரஷ்தீப் சிங் கேட்ச் விட்டதற்காக கொந்தளிக்கும் வகையில் உணர்ச்சியை வெளிப்படுத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வகையில் நேற்றைய போட்டியிலும் கடுமையான கோபங்களை வெளிப்படுத்திய அவர் முகமத் ஹபீஸ் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் கூறுவது போல கேப்டன்ஷிப் அழுத்தத்தால் திணறுவது வெளிப்படையாகத் தெரிவதாக நிறைய இந்திய ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். ஏனெனில் ஆக்ரோசத்திற்கும் கோபத்திற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

எடுத்துக்காட்டாக விராட் கோலி ஒவ்வொரு விக்கெட் விழுந்த போது கொண்டாடுவதும் எதிரணிகளை ஸ்லெட்ஜிங் செய்யும் போதும் ஆக்ரோசம் தெரியும். ஆனால் இவர் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கோபத்தை வெளிப்படுத்துவது அவருடைய முகத்தில் தெளிவாக தெரிகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி முதலில் அணி வீரர்களிடம் கோபமாக நடந்து கொள்வதை நிறுத்துங்கள் என்று சமூக வலைதளங்களில் சாடுகிறார்கள்.

Advertisement