IND vs WI : முன்னேறாத பவுலருக்காக செய்யப்பட்ட மாற்றம் – தோல்வியை பரிசளித்த ரோஹித் கேப்டன்ஷிப்பை விளாசும் ரசிகர்கள்

ROhit Sharma IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் 2-வது செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் நகரில் ஆகஸ்டு 1-ஆம் தேதியான நேற்று வீரர்களின் லக்கேஜ் வருகையால் தாமதமாக இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு முதல் பந்திலேயே கேப்டன் ரோகித் சர்மா கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்த சில ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் 11 (6) ஸ்ரேயாஸ் அய்யர் 10 (11) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். மேலும் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் 24 (12) ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 31 (31) ரன்களிலும் ரவீந்திர ஜடேஜா 27 (30) ரன்களிலும் அவுட்டாகி பெரிய ரன்களை எடுக்காமல் கைவிட்டனர். கடைசியில் காப்பாற்றுவார் என கருதப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் 7 (13) ரன்களில் அவுட்டான நிலையில் எஞ்சிய பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 138 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

விண்டிஸ் முதல் வெற்றி:
அந்த அளவுக்கு அற்புதமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஓபேத் மெக்காய் 6 விக்கெட்டுகளும் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதை தொடர்ந்து 139 என்ற சுலபமான இலக்கை துரத்திய அந்த அணிக்கு கெய்ல் மேயர்ஸ் – பிரண்டன் கிங் தொடக்க ஜோடி 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது. அதில் தடுமாறி கொண்டிருந்த மேயர்ஸ் 8 (14) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 14 (11) ரன்களிலும் சிம்ரோன் ஹெட்மையர் 6 (10) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் மறுபுறம் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 68 (52) ரன்கள் குவித்த பிரண்டன் கிங் வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ரோவ்மன் போவல் 5 (8) ரன்களில் அவுட்டானாலும் டேவோன் தாமஸ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 31* (19) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவரில் 141/5 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த சுற்றுப்பயணத்தின் முதல் வெற்றியை பதிவு செய்து 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. இப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதும் மிடில் ஆர்டரில் யாருமே 50 ரன்கள் கூட பார்ட்னர்ஷிப் அமைக்காததும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

தோல்வியான மாற்றம்:
அதைவிட இப்போட்டியில் 11 பேர் அணியில் நிகழ்த்தப்பட்ட ஒரே ஒரு மாற்றம் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. பொதுவாக ஒரு அணி வெற்றி பெற்றால் அந்த அணியை கலைக்காமல் வெற்றிநடை தொடர்வதே வெற்றியின் ரகசியம் என்று கூறுவார்கள். அந்த வகையில் முதல் போட்டியில் 190 ரன்களை துரத்த விடாமல் அற்புதமாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சு கூட்டணியிலிருந்து இப்போட்டியில் இளம் சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டார். இத்தனைக்கும் முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய பிஷ்னோய் 26 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து 6.50 என்ற சிறப்பான எக்கனாமியில் பந்து வீசியிருந்தார்.

அந்த நிலைமையில் இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற ஆவேஷ் கான் 2.2 ஓவரில் 1 விக்கெட் எடுத்தாலும் 31 ரன்களை 13.29 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசினார். இவரை தவிர ஏனைய அனைத்து பவுலர்களும் 8க்கும் குறைவான எக்கனாமியிலேயே சிறப்பாக பந்துவீசி வெற்றிக்காக போராடினார்கள். ஆனால் இவரைத் தேர்வு செய்வதை நியாயப்படுத்துவதற்காக அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமாருக்கு 2 ஓவர்கள் மீதமிருந்த போதிலும் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது இவருக்கு பந்துவீசும் வாய்ப்பை ரோகித் சர்மா கொடுத்தார்.

ரசிகர்கள் கோபம்:
அதில் முதல் பந்திலேயே நோபால் போட்ட அவர் 6, 4 என அடுத்த 2 பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளை கொடுத்து போராடியிருந்தால் கிடைத்திருக்கும் வெற்றியை எளிதாக எதிரணிக்கு தாரை வார்த்தார். இத்தனைக்கும் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில் பிரஸித் கிருஷ்ணா தடுமாறினார் என்பதற்காக கொடுக்கப்பட்ட வாய்ப்பில் அவர் 6 ஓவரில் 54 ரன்களை வாரி வழங்கியதால் 3-வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டது பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரோஹித் சர்மாவுக்கும் நன்றாக தெரியும்.

ஆனாலும் கொஞ்சமும் முன்னேற்றமடையாத இவருக்காக வெற்றி அணியை பிரித்து மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள் கடைசி ஓவரை புவனேஸ்வர் குமாருக்கு கொடுக்காத ரோஹித்தின் சுமரான கேப்டன்ஷிப் தான் இந்த தோல்வியை பரிசளிப்பதாக சமூக வலைதளங்களில் விளாசுகின்றனர்.

Advertisement