சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி எப்படிப்பட்ட ஆளுமை தன்மை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எதிரில் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் பதட்டம் அடையாமல் பொறுமையாக காத்திருந்து இறுதிவரை திட்டத்தை சரியாக செயல்படுத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்பவர் தோனி. 39 வயதான அவர் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தற்போது வரை கேப்டனாக விளையாடி வருகிறார்.
கேப்டனாக அவர் அமைக்கும் பீல்டிங் வியூகங்கள், வீரர்களின் மீது வைக்கும் நம்பிக்கை, பவுலர்களுக்கான திட்டம், விக்கெட் கீப்பிங் பணி மற்றும் ஃபினிஷிங் என அனைத்து துறைகளிலும் அவர் சிறப்பாக செயல்படக் கூடியவர். போட்டியின் எந்த சூழ்நிலையிலும் பதட்டம் அடையாமல் தெளிவாக தோனி எடுக்கும் முடிவுகள் மிகச் சரியாக அமையும். மேலும் இந்திய அணியிலும் அவர் பல வீரர்களை சரியான பாதைக்கு திருப்பி விட்டுள்ளார்.
குறிப்பாக ஜடேஜா, ரெய்னா, ரோகித் சர்மா போன்றவர்களுக்கு ஆதரவளித்து அவர்களின் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது கேப்டன் டோனி என்றால் மிகையல்ல. அந்த வகையில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த ரோகித் சர்மாவை துவக்க வீரராக மாற்றி அவரை இன்று உலகின் மிகச்சிறந்த துவக்க வீரராக மாற்றியதே தோனி தான். இந்நிலையில் ரோகித் சர்மா 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் போது அவர் அந்த போட்டியில் 250 ரன்களை அடிப்பார் என்று முன்கூட்டியே டோனி கணித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் தோனி கூறியது போலவே ரோகித் சர்மா 250 ரன்களை கடந்து 264 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். மொத்தம் 173 பந்துகளை சந்தித்த ரோகித்சர்மா 33 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்களுடன் 264 ரன்கள் அடிக்க இந்திய அணி 404 ரன்கள் குவித்தது. அதன்பிறகு இந்த மெகா இலக்கை துரத்திய இந்திய இலங்கை அணி 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது 153 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
If Rohit doesn’t get out he will certainly get 250 today
— Mahendra Singh Dhoni (@msdhoni) November 13, 2014
ரோகித் சர்மா இப்படி இந்த போட்டியில் இரட்டை சதம் அடிப்பார் என்று தோனி வெளியிட்டுள்ள அந்த பழைய ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோகித் சர்மா அந்த போட்டியில் மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் இதுவரை மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.