இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது.
இலங்கை அணி அணி இறுதியில் 19.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக பல புதுமுக வீரர்கள் விளையாடியதால் ரன் குவிப்பில் சற்று தடுமாறியது. குறைந்த அளவு ரன் குவித்த காரணத்தினாலேயே இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் : நாங்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே இந்திய அணியை குறைந்த ரன்களில் சுருட்டினால் நிச்சயம் சேசிங் செய்யலாம் என்று நினைத்தோம். அதன்படி முதல் 6 ஓவர்களில் ரன்களைக் குவிக்க நினைத்தோம். ஆனால் அது முடியாமல் போனது.
மேலும் மிடில் ஓவர்களிலும் சில விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. சரியான நேரத்தில் தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் ஹசரங்கா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது கடினமான ஒரு விடயம். பல புதுமுக வீரர்கள், இளம் வீரர்கள் இந்த தொடரில் விளையாடி வருகின்றனர்.
நான் நிச்சயம் இந்த வெற்றிக்கு பிறகு பிசிசிஐ-க்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இது போன்ற கடினமான சூழ்நிலையில் இந்த தொடரை நடத்துவதற்காக எனது நன்றிகள் என இலங்கை கேப்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.