இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறினாலும் ஓப்பனிங்கில் களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். அதே போல ஒரு உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த ஒரே வீரராகவும் உலக சாதனை படைத்த அவர் தற்போது இந்தியாவின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
இருப்பினும் அவருடைய தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது. மேலும் 36 வயதை கடந்து விட்ட அவர் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 400 ரன்கள் அடிப்பதற்கு தடுமாறி வருகிறார். அதனால் விரைவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையே ரோஹித் சர்மா இந்தியாவை தலைமை தாங்கும் கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 வயசு வரைக்கும்:
இந்நிலையில் ரோகித் சர்மா போன்ற தரமான வீரர் முடிந்தால் 50 வயது வரை இந்தியாவுக்கு விளையாடலாம் என்று முன்னாள் வீரர் மற்றும் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் 37 வயதை தாண்டிய வீரர்களை இந்தியாவுக்காக தேர்வு செய்யக்கூடாது என்ற கோட்பாட்டை பிசிசிஐ மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
அதற்கான காரணத்தைப் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவர் இவ்வளவு வயதாகி விட்டார் என்று வயதைப் பற்றி பலரும் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் 40, 42 அல்லது 45 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து விளையாடுவதில் என்ன பிரச்சனை? நம்முடைய நாட்டில் ஒருவர் 40 வயதை தாண்டி விட்டால் நீங்கள் அவ்வளவு தான் என்று மக்கள் நம்புகின்றனர். அத்துடன் உங்களுடைய நேரம் முடிந்து விட்டது”
“குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அமைதியாக இருங்கள் என்று அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மையாக நீங்கள் முடிந்து விடவில்லை. இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது மோஹிந்தர் அமர்நாத் 38 வயதில் கொண்டிருந்தார். அவர் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்திய கிரிக்கெட்டில் வயதை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுக்கும் முறை அகற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் வரலாற்று சாதனை – விவரம் இதோ
“ரோகித் சர்மா மற்றும் சேவாக் ஆகிய 2 மகத்தான வீரர்கள் எப்போதும் ஃபிட்னஸ் பற்றி நினைத்ததில்லை. எனவே தம்மால் முடியும் பட்சத்தில் ரோகித் சர்மா 50 வயது வரை விளையாடலாம்” என்று கூறினார். இருப்பினும் இப்போதே ஃபிட்டாக இல்லை என்று விமர்சனங்களை சந்திக்கும் ரோஹித் சர்மா 40 தாண்டி விளையாடுவாரா என்பது சந்தேகம் என்றே சொல்லலாம்.