ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 43வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு ஷமி வேகத்தில் சாய்க் ரசீத் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து வந்த சாம் கரண் தடுமாறி 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் மறுபுறம் அதிரடி காட்டிய ஆயுஷ் மாத்ரே 30 (19) ரன்னில் அவுட்டான நிலையில் நங்கூரம் கலந்த அதிரடிக் காட்டிய ரவீந்திர ஜடேஜா 21 (17) ரன்னில் போல்டானார். மிடில் ஆர்டரில் அறிமுகமாக களமிறங்கிய தேவால்ட் ப்ரேவிஸ் அதிரடியாக வெளுத்து வாங்கினார். ஆனால் அவரும் 42 (25) ரன்கள் எடுத்த போது கமிண்டு மென்டிஸ் அபார கேட்ச்சால் பெவிலியன் சென்றார்.
சென்னை வெல்லுமா:
அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே 12 (9) ரன்னில் அவுட்டானார். அவருடன் மறுபுறம் தடுமாற்றமாக விளையாடிய கேப்டன் தோனி 6 (10) ரன்னில் அவுட்டாகி தல அஜித் மற்றும் ரசிகர்களுக்கும் சென்னைக்கும் ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் தீபக் ஹூடா 22 (21) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய சென்னை 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக ஹர்சல் படேல் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். முன்னதாக இந்த வருடம் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்படும் சென்னை அணி தங்களால் முடிந்தளவுக்கு அனைத்து மாற்றங்களையும் செய்து வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக சென்னை அணி சமீப காலங்களாகவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற விமர்சனங்கள் இருக்கின்றன.
வரலாறு காணாத முயற்சி:
அதை உடைக்கும் வகையில் இந்த வருடம் சென்னை அணி ரசித், ஆயுஷ் மாத்ரே என புதுமுக வீரர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு கொடுத்து வருகிறது. அதன் உச்சமாக இந்தப் போட்டியில் அந்த 2 வீரர்களுடன் சேர்த்து தேவாலட் ப்ரேவிஸ், பதிரனா, நூர் அஹ்மத், அன்சுல் கம்போஜ் என 25 வயதுக்கும் குறைவான 6 இளம் வீரர்களுக்கு சென்னை நிர்வாகம் வாய்ப்பு கொடுத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இப்படி சென்னை அணியில் 25க்கும் குறைவான வயதில் 6 வீரர்கள் விளையாடியது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க: இந்த வருஷம் நாங்க வாங்குன பிளேயர்லயே இவர்தான் பெஸ்ட் பிளேயர் – ஆர்.சி.பி கோச் பேட்டி
மேலும் தற்போதைய சிஎஸ்கே அணியின் சராசரி வயது 27 வருடம் 69 நாட்கள். இது 2018க்குப்பின் சிஎஸ்கே அணி களமிறக்கிய மிகவும் இளமையான அணியாகும். மொத்தத்தில் வெற்றிக்காகவும் வருங்காலத்திற்காகவும் சென்னை அணி இளம் ரத்தத்தை பாய்ச்சத் துவங்கியுள்ளது. ஒருவேளை அதில் இந்த வருடம் வெற்றித் தவறினாலும் வருங்காலத்தில் தொடர் வெற்றிகள் கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.