ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நகரில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி 23வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியை குஜராத் தங்களது சொந்த மண்ணில் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதில் முதலில் விளையாடிய குஜராத் சாய் சுதர்சன் 82, சாருக்கான் 36, ஜோஸ் பட்லர் 36 ரன்கள் எடுத்த உதவியுடன் 218 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய ராஜஸ்தான் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 19.2 ஓவரில் 159க்கு ஆல் அவுட்டாகி தங்களது மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 41, ஹெட்மயர் 52 ரன்கள் எடுத்தும் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் நான்காவது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இதெல்லாம் அவுட்டா:
முன்னதாக அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக ரியான் பராக் நான்காவது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி 26 (14) ரன்கள் எடுத்தார். அப்போது குல்வந்த் கெஜ்ரோலியா வீசிய 7வது ஓவரின் 4வது பந்தை அடிக்க முயற்சித்த அவர் தவற விட்டார். அவரது பேட்டில் பந்து பட்டதாக கருதிய பவுலர் விக்கெட் கேட்டதைத் தொடர்ந்து களத்தில் இருந்த நடுவர் அவுட் வழங்கினார்.
அதை ரியான் பராக் ரிவியூ செய்த போது பேட்டை பந்து கடக்கும் சமயத்தில் ஸ்னிக்கோ மீட்டரில் ஸ்பைக் தெரிந்ததால் மூன்றாவது நடுவரும் அவுட் என்று அறிவித்தார். அதைப் பார்த்த ரியான் பராக் இது எப்படி அவுட்டாகும்? என்று நடுவர்களிடம் வாதிட்டார். ஏனெனில் பந்து தாண்டி செல்லும் அதே சமயத்தில் அவருடைய பேட் தரையில் பட்டது.
ரசிகர்கள் விமர்சனம்:
அது தான் ஸ்னிக்கோ மீட்டரில் ஸ்பைக்கை ஏற்படுத்தியது என்று நடுவர்களிடம் ரியான் பராக் வாதிட்டார். ஆனாலும் நடுவர்கள் அந்த முடிவை வாபஸ் பெறாததால் ரியான் பராக் ஏமாற்றத்துடன் திரும்பினார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் நடுவர்கள் தவறான தீர்ப்பை வழங்கியதாக சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். ஏனெனில் ஸ்பைக் ஏற்படும் போது பேட்டுக்கும் பந்துக்கும் இடையே அரை இன்ச் அளவுக்கு இடைவெளி இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 4 வேகப்பந்து வீச்சாளர்களால் வந்த வினை.. சஞ்சு சாம்சனுக்கு விதிக்கப்பட்ட 24 லட்சம் அபராதம் – என்ன நடந்தது?
மேலும் ஸ்பைக் ஏற்படத் துவங்கும் சமயத்தில் பந்தின் நிழல் பேட்டில் படுவது நன்றாகத் தெரிகிறது. ஒருவேளை பேட்டில் பந்து பட்டியிருந்தால் அந்த நிழல் எப்படி தெரியும்? என்று ரசிகர்கள் புகைப்பட ஆதாரத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். அத்துடன் ரியான் பராக் நடுவர்களிடம் வாதிட்டதற்காக பிசிசிஐ எந்த தண்டனையையும் வழங்கவில்லை. அந்த இடத்தில் நடுவர்கள் தவறான தீர்ப்பை வழங்கியதாலேயே அதை மறைக்கும் வகையில் பிசிசிஐ தண்டனை வழங்காமல் அமைதியாக இந்த விஷயத்தை அமுக்கியதாக ரசிகர்கள் பேசுகின்றனர்.



