உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா தன்னை நம்பர் ஒன் டி20 அணி என நிரூபித்து கோப்பையை வெல்ல கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறது. முன்னதாக மொகாலியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் பந்து வீச்சில் 211 ரன்களை வாரி வழங்கி தோல்வியடைந்தது. விரைவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு முன்பாக சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்ற இந்தியா சொந்த மண்ணில் 200 ரன்களைக் கூட கட்டுபடுத்தமுடியாமல் இப்படி மோசமாக பந்து வீசி தோற்றது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றின் முதலிரண்டு போட்டிகளில் 19வது ஓவரில் முறையே 25, 19 ரன்கள் எதிரணிக்கு தேவைப்பட்டபோது முறையே 19, 14 ரன்களை வாரி வழங்கிய புவனேஸ்வர் குமார் இப்போட்டியில் மீண்டும் 19வது ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது 18 ரன்களை வாரி வழங்கி வெற்றியை கோட்டை விட்டது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. இத்தனைக்கும் கடந்த 10 வருடங்களாக விளையாடிய அனுபவம் கொண்டிருந்தும் புதிய பந்தை ஸ்விங் செய்து பவர்ப்ளே ஓவர்களில் அசத்தும் இவர் கடைசி கட்ட ஓவர்களில் இப்படி அடி வாங்குவதில் கொஞ்சமும் முன்னேற்றமடையாமல் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.
ஈசியா அடிப்பாங்க:
ஏனெனில் உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ஜஸ்பிரித் பும்ராவுடன் 2வது வேகப்பந்து வீச்சாளராக விளையாடப் போகும் இவர் இப்படி தொடர்ந்து சொதப்பி வருவதால் இம்முறையும் உலக கோப்பை இந்தியாவுக்கு கிடையாது என்று ரசிகர்கள் இப்போதே கூறுகிறார்கள். மேலும் உலக கோப்பையில் விளையாடும் 3வது வேகப்பந்து வீச்சாளர் இன்னும் யாரென்று தெரியாத நிலையில் 2வது பவுலரான இவர் சொதப்புவதால் டெத் ஓவர்களை பார்த்துக்கொள்ள வேண்டிய மொத்த பாரமும் ஜஸ்பிரித் பும்ராவின் தலையில் விழுந்துள்ளது.
இந்நிலையில் ஸ்விங் செய்வதற்கு ஏற்ற கால சூழ்நிலைகள் இருந்தால் மட்டுமே புவனேஸ்வர் குமாரால் அசத்த முடியும் என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் எஞ்சிய தருணங்களில் அவரது பவுலிங்கை எதிரணியினர் எளிதாக கணித்து அடிக்கும் அளவுக்கு அவரிடம் வேகமில்லை என்று கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “புவனேஸ்வர் குமார் மோசமான பவுலர் கிடையாது. ஆனால் கால சூழ்நிலைகளுக்கேற்ற பவுலர். அதாவது புதிய பந்தில் ஸ்விங் கிடைத்தால் அவர் ஆபத்தானவர்”
“ஆனால் பிட்ச் கை கொடுக்கவில்லை என்றால் அவரால் அவருடைய அணியின் இலக்கை கட்டுப்படுத்த முடியாது. அவர் அனுபவம் வாய்ந்த பவுலர் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே அளவுக்கு எதிரணியும் அவருடைய பலத்தை அறிந்து அவருடைய பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன. எனவே பெரிய போட்டிகளில் விளையாடும் போது நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்”
“ஏனெனில் எதிரணியினர் உங்களைப் பார்த்து உங்களை அடிக்க என்ன செய்ய வேண்டுமென்ற வேலையில் ஈடுபடுகிறார்கள். அதனால் புவனேஸ்வரின் பவுலிங் எளிதாக கணிக்கப்படுகிறது. கடைசி ஓவர்களில் அவர் ஆஃப் ஸ்டம்ப்பை நோக்கி யார்கர் பந்துகளை வீசுகிறார். ஆனால் அவரது பந்துகளில் வேகமில்லை. அதனால் வேகப்பந்து வீச்சாளர்களை விட அவரைப் போன்ற மித வேகப்பந்து வீச்சாளரை அடிப்பதற்கு பேட்ஸ்மேன்கள் தயங்குவது கிடையாது. இதைத் தாண்டியும் இந்தியா அவரை பயன்படுத்த நினைத்தால் ஒன்று ஆரம்பகட்ட ஓவர்களிலேயே பயன்படுத்தி முடித்துவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பொதுவாகவே கடைசி கட்ட ஓவர்களில் பந்து தேய்ந்து விடும் என்பதால் த்ன்னுடைய பலமான ஸ்விங்கை புவனேஷ்வர் குமாரால் செய்ய முடிவதில்லை. அதே சமயம் பும்ராவை போல் வேகமில்லாமல் யார்க்கர் பந்துகளை வீச முயற்சிக்கும் அவரை எதிரணியினர் சரமாரியாக அடிக்கிறார்கள். அதனால் டெத் ஓவர்களில் புவனேஸ்வர் குமாரை நம்பக்கூடாது என்று ஆசிய கோப்பை தோல்வியின் போதே எச்சரித்திருந்த சல்மான் பட் தற்போது மீண்டும் அதையே கூறியுள்ளார்.
இதையும் படிங்க : IND vs AUS : இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ
இருப்பினும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஷமி, தீபக் சஹர் போன்றவர்களை கழற்றி விட்டு அவரை 2வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்த அணி நிர்வாகம் முடிவெடுத்து விட்டதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.