இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வெகுசிறப்பாக, விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மே 8-ஆம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற்ற 58-வது போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அந்த போட்டியின் போது ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பி.சி.சி.ஐ போட்டுள்ள பக்கா பிளான் :
மைதானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆட்டம் தடைபட்டதாக கூறி அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதற்றமான போர் சூழல் காரணமாகவே அந்தப் போட்டி நிறுத்தப்பட்டதாகவும், ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் தற்போது இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு காரணங்களாகவே அந்தப் போட்டி நிறுத்தப்பட்டதாகவும் பின்னர் அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்தியா பாகிஸ்தான் போர் சூழல் காரணமாக தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக எஞ்சியுள்ள இந்த தொடர் முழுவதுமாக நடைபெறுமா? அல்லது இந்த தொடரானது ரத்து செய்யப்படுமா? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் அனைவரது மத்தியிலும் இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது 58 போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இன்னும் எஞ்சியுள்ள 16 போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ ஒரு திட்டம் தீட்டி உள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் உள்ள சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் மட்டும் வைத்து எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரை மே மாதத்திற்குள் நடத்தவில்லை என்றால் நிச்சயம் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பிலை என்று கூறப்படுகிறது. பின்னர் இந்த ஆண்டில் எப்போதும் இந்த தொடரினை நடத்த முடியாமல் போகின்ற சூழல் கூட ஏற்படலாம் என்பதனால் இந்த மாதத்திற்குள் ஒவ்வொரு நாளைக்கும் இரண்டு போட்டிகளை வைத்து மூன்றே மைதானங்களில் முடிக்கும் முடிவை பிசிசிஐ கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் 90 டிகிரிக்கு ஆசைப்பட்டு.. பழசை மறந்ததே இப்படி தடுமாறக் காரணம்.. சஞ்சய் பங்கர் பேட்டி
கடந்த 18 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாமல் தவித்து வரும் ஆர்.சி.பி அணி இம்முறை மிகச்சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களுக்கு கோப்பையை கைப்பற்ற ஒரு வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக இந்த செய்தி ஆர்.சி.பி அணியின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.