- Advertisement -
ஐ.பி.எல்

2025 ஐ.பி.எல் தொடரில் அசத்தி வரும் ஆயுஷ் மாத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்துள்ள ஜாக்பாட் – பி.சி.சி.ஐ முடிவு

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு அணிகளை சேர்ந்த இளம் வீரர்கள் தங்களது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதிலாக தற்போது சி.எஸ்.கே அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் ஆயுஷ் மாத்ரே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஆயுஷ் மாத்ரே மற்றும் சூர்யவன்ஷிக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு :

ஏனெனில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகி வெகு சில போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள அவர் துவக்க ஓவர்களிலேயே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை குவிக்கிறார். அதுமட்டுமின்றி அனுபவம் வாய்ந்த பவுலர்களுக்கு எதிராகவும் அவரது பயமற்ற நேர்த்தியான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டப்படும் விடயமாக இருந்து வருகிறது.

- Advertisement -

மேலும் எதிர்கால சிஎஸ்கே அணியை வலுப்படுத்தும் நோக்கில் அவர் தொடர்ந்து சென்னை அணியுடன் பயணிக்க வேண்டும் என்றும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது. அதே போன்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் வேளையில் அவருக்கு பதிலாக 14 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைத்தது.

அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது மட்டுமின்றி தான் விளையாடிய மூன்றாவது போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். குஜராத் அணியின் நட்சத்திர பவுலர்களான இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான் என உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவே பயமின்றி ஆடிய அவரது ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியில் ஆயுஷ் மாத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியாருக்கு இடம் வழங்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் அண்டர் 19 உலக கோப்பை தொடரானது நடைபெற இருப்பதால் அதற்கு முன்னதாக தற்போது இந்திய ஏ அணி இங்கிலாந்து செல்ல உள்ளது.

இதையும் படிங்க : 14 வயதில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பரிசுத்தொகையை அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் – எவ்வளவு தெரியுமா?

இந்த தொடரில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதுமட்டும் இன்றி அண்டர் 19 உலககோப்பை தொடரிலும் அவர்கள் அசத்தும் பட்சத்தில் வெகு விரைவாகவே இந்திய அணியிலும் அவர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -