இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவிந்திருந்த ஆஸ்திரேலியா அணியானது இன்று தங்களது இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. மிகச் சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 180 ரன்களிலும், கேமரூன் கிரீன் 114 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
அவர்களை தவிர்த்து பின்வரிசையில் லேதன் லையன் 34 ரன்களையும், டாட் மர்பி 41 ரன்களையும் குவிக்க இரண்டாம் நாள் முழுவதும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சை 480 ரன்களுக்கு முடித்துக்கொண்டது. அதன்பின்னர் தற்போது தங்களது முதல் இன்னிங்ஸ்சை விளையாடி வரும் இந்திய அணியானது விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் குவித்துள்ளது.
இதன் காரணமாக இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணியை விட 444 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதுமே ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதற்கு காரணம் யாதெனில் : இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் தான் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதன் பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தனது தாயின் உடல் நிலையை கருதி அவர் நாடு திரும்புவதாக அறிவித்திருந்தார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத அவர் நான்காவது போட்டியிலும் விளையாட மாட்டார் என்று நிர்வாகம் கூறியிருந்தது. இந்நிலையில் பேட் கம்மின்ஸ்சின் தாயார் மரியா நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் இந்த மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தங்களது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க : IND vs AUS : ஃபிளாட்டான பிட்ச்சிலும் தரத்தை காட்டி இந்தியாவை காப்பாற்றிய அஷ்வின், கும்ப்ளேவை மிஞ்சி 3 புதிய வரலாற்று சாதனை
அதோடு சொல்லமுடியா துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல்களையும் தெரிவித்துள்ளனர். இப்படி பேட் கம்மின்ஸ்சின் தயார் உயிரிழந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளம் மூலமாக தங்களது இரங்கல்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.