டி20 உலக கோப்பை நெருங்கி வரும் வேளையில் இன்னும் இந்திய அணியில் நிலையான பிளேயிங் லெவன் உறுதியாகவில்லை. அதோடு எந்தெந்த வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெறப்போகிறார்கள் என்கிற குழப்பம் நிலவி வருகிறது. ஏனெனில் பும்ரா அணியில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக யார் மாற்று வீரராக வரப்போகிறார்கள்? தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரில் யாருக்கு இடம் கிடைக்கப் போகிறது? ஆல்ரவுண்டர்களாக எந்தெந்த வீரர்கள் விளையாடப்போகிறார்கள் என்பது குறித்த பல்வேறு கேள்விகள் தற்போது சமூக வலைதளத்தில் இந்திய அணி குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்ற பெரிய கேள்வியே எழுந்துள்ளது. ஏனெனில் அண்மைக்காலமாகவே தினேஷ் கார்த்திக்க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால் அவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரிஷப் பண்டிற்கு அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஒரு சில போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதிலும் அதிரடியாக ஆடி அவரின் விக்கெட்டை எளிதாக பறிகொடுப்பதனால் அவரது இடம் தற்போது இந்திய அணியில் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் குழப்பத்தில் இருப்பதால் ரிஷப் பண்ட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு வீரருக்கும் தகுந்து இடங்களை இந்திய அணி உறுதி செய்து கொடுக்க வேண்டும்.
ஆனால் ரிஷப் பண்ட் விஷயத்தில் அவருடைய இடமானது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கே முதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன் காரணமாக ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நான்காம் இடத்தில் இறங்கி விளையாடி வந்த இவரை அணியிலிருந்து எப்படி உங்களால் வெளியேற்ற முடியும் என ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணிக்காக 62 டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ள போதிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஆஸ்திரேலியா மைதானங்களில் நடைபெறும் போட்டிகளை கருத்தில் கொண்டு இந்திய அணி தற்போது வீரர்களை தேர்வு செய்வது வருவதால் அவருக்கு இடம் கிடைக்காமல் இருக்கலாம்.
இதையும் படிங்க : 1992 உ.கோ பாக் வென்றது நியாபம் இருக்கா – பும்ராவால் இந்தியாவுக்கு இழப்பில்லை, ரசிகர்களுக்கு முன்னாள் வீரர் தெம்பு
ஆனாலும் பண்ட் நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை. அவரே அவரின் மீது நம்பிக்கை வைத்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் அவருக்கு இந்திய அணியில் உறுதியான இடம் கிடைக்கும். ஒருவேளை அவர் சரியாக செயல்படாமல் போனால் இந்திய அணியில் அவர் இடத்தை இழக்கவும் நேரிடும் என அஜய் ஜடேஜா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.