இந்தியாவில் கோலகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 3ஆம் தேதி மதியம் 2 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 34வது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. கத்துக்குட்டிகளாக பார்க்கப்பட்டாலும் இத்தொடரில் பெரிய அணிகளை தோற்கடித்து தங்களுடைய தரத்தை காட்டிய இவ்விரு அணிகள் மோதிய போட்டி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அந்த சூழ்நிலையில் துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பரேசி 1 ரன்னில் அவுட்டான நிலையில் மற்றொரு துவக்க வீரர் மேக்ஸ் ஓ’தாவுத் 42 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து கோலின் ஆக்கர்மேன் 29 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்காட் எட்வேர்ட்ஸ் தேவையின்றி 0 ரன்களில் ரன் அவுட்டானார்.
அவர்களைத் தொடர்ந்து பஸ் டீ லீடி 3, ஜுல்ஃபிகர் 3, வேன் பீக் 3 ரன்களில் அவுட்டாக மறுபுறம் போராடிய எங்கல்பேர்ச்ட் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவர்கள் தாக்கு பிடிக்காத நெதர்லாந்து 46.3 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 3 நூர் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து 180 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ரஹமனுல்லா குர்பாஸ் 10 ரன்களில் அவுட்டாக மற்றொரு துவக்க வீரர் இப்ராஹிம் ஜாட்ரானும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஷாகிதி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அதில் ரஹ்மத் ஷா 52 (54) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபடியும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய சாகிதி 56* (64) ரன்கள் குவித்தார்.
அவருடன் ஓமர்சாய் 31* (28) ரன்கள் எடுத்ததால் 31.3 ஓவரிலேயே 183/3 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. அதனால் நெதர்லாந்து சார்பில் வேன் பீக், ஜூல்பிகர், வேன் டெர் மெர்வி தலா 1 விக்கெட் எடுக்கும் வெற்றி காண முடியவில்லை. மறுபுறம் 7 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு சமமாக 8 புள்ளிகளை கொண்டுள்ளது.
அதனால் தங்களுடைய கடைசி 2 போட்டிகளில் வென்றால் 56% செமி ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற நல்ல நிலைமைக்கு ஆப்கானிஸ்தான் வந்துள்ளது. குறிப்பாக அடுத்த 2 போட்டிகளில் வென்று நியூசிலாந்தை விட அதிக ரன் ரேட்டை பெறும் பட்சத்தில் அந்த அணி செமி ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. ஆனால் அடுத்ததாக தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்வதால் அது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்.. நெதர்லாந்தை ஊதி தள்ளிய ஆப்கானிஸ்தான்.. செமி ஃபைனல் செல்லுமா?
மறுபுறம் ஆப்கானிஸ்தான் தற்போது வென்றுள்ளதால் அடுத்த 2 போட்டிகளில் வென்றாலும் பாகிஸ்தான் நம்பிக்கொண்டிருக்கும் 17% அரைகுறை செமி ஃபைனல் வாய்ப்பும் பறிபோக தயாராகியுள்ளது. இதற்கிடையே தோல்வியை பதிவு செய்த நெதர்லாந்து இத்தொடரின் லீக் சுற்றிலிருந்து வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது.