போன மேட்ச்ல என்னால தான் பிரச்சனை வந்துச்சி. நல்லவேளை இந்த டைம் காப்பாத்திட்டேன் – ஆட்டநாயகன் ஆடம் ஜாம்பா பேட்டி

Adam-Zampa
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியானது இன்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த அந்த அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஏனெனில் இந்த போட்டி துவங்கி இலங்கை அணி தங்களது இன்னிங்ஸை ஆரம்பித்ததும் மிகச் சிறப்பாக ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு முதல் விக்கெட்டுக்கே 125 ரன்கள் குவித்து பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. அதன் பின்னர் 157 ரன்களுக்கு 2-ஆவது விக்கெட்டை இழந்த வேளையில் நிச்சயம் இலங்கை அணி பெரிய ஸ்கோரை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அவ்வேளையில் அந்த அணியின் முக்கிய வீரர்களான குசால் மெண்டிஸ் மற்றும் சமர விக்ரமா ஆகியோரை அடுத்தடுத்து காலி செய்த ஆடம் ஜாம்பா சமிக்கா கருணரத்னே மற்றும் தீக்சனா என பின் வரிசையில் இருந்த வீரர்களையும் காலி செய்தார். மொத்தமாக இந்த போட்டியில் 8 ஓவர்களை வீசிய ஜாம்பா 1 மெய்டன் உட்பட 47 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 209 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழக்க பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் ஆடம் ஜாம்பா கூறுகையில் :

- Advertisement -

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இன்று நான் சிறப்பாக உணரவில்லை. ஏனெனில் என்னுடைய முதுகுப்பகுதியில் தசை பிடிப்பு இருந்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் விளையாடிவிட்டு தற்போது மீண்டும் விளையாடியதால் அந்த சிரமத்தை சந்தித்தேன். ஆனாலும் இன்று எனது பந்துவீச்சு மிகவும் நன்றாக இருந்ததாக உணர்கிறேன். எங்களது அணியின் கேப்டன் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னரையும், மற்ற பேட்ஸ்மேன்களுக்கு எதிராக என்னையும் கொண்டு வந்தார்.

தனிப்பட்ட வகையில் நான் இந்த போட்டியில் பந்துவீசிய விதம் என்னுடைய பெஸ்ட் கிடையாது. இருந்தாலும் என்னுடைய அணியின் வெற்றிக்கு நான் பங்களித்ததில் மகிழ்ச்சி. என்னுடைய வேலை மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது மட்டும் தான். கடந்த போட்டியில் என்னால் மிடில் ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அதன் காரணமாகவே எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் கடந்த போட்டியின் போது இறுதி கட்ட ஓவர்களில் கஷ்டப்பட்டனர். ஆனால் இன்றைய போட்டியில் நான் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : சூப்பரா ஸ்டார்ட் பண்ண இலங்கை அணியை சுருட்டி வீச இதுவே காரணம் – வெற்றிக்கு பின்னர் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

அதனால் எங்களால் எளிதில் வெற்றி பெற முடிந்தது. இந்த வெற்றியை நாங்கள் அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறோம். என்னுடைய பந்துவீச்சில் அதிக ரன்கள் சென்றாலும் பரவாயில்லை விக்கெட் எடுக்க வேண்டியது மட்டும் தான் என்னுடைய வேலை. அப்படி விக்கெட் எடுத்து ரன்கள் சென்றாலும் நான் மகிழ்ச்சியாக தான் இருப்பேன். எங்களுக்கு அடுத்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி நிச்சயம் கடினமான ஒன்றாக இருக்கும் என ஆடம் ஜாம்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement