
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது முள்ளான்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தி விளையாடிய இந்திய அணியானது 162 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்ததால் தென்னாப்பிரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.
இந்த போட்டியில் 3 ஆம் இடத்தில் பேட்டிங் செய்ய வந்த அக்சர் படேல் 21 பந்துகளை சந்தித்து 21 ரன்களை மட்டுமே அடித்தது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது. அதோடு அவர் களமிறங்கிய பேட்டிங் வரிசை பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் தற்போது அக்சர் படேலின் பேட்டிங் ஆர்டர் குறித்து முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ராவும் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அந்தவகையில் அவர் கூறியதாவது : பேட்டிங் ஆர்டரை சரிசெய்வது தற்போதைக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் 214 ரன்கள் என்கிற இலக்கு மிகப்பெரிய இலக்கு. எனவே சுப்மன் கில் ஆட்டமிழந்ததும் சூரியகுமார் யாதவ் தான் களமிறக்கியிருக்க வேண்டும். அதேபோன்று பவர்பிளே ஓவர்களில் 60 ரன்களுக்கு மேல் அடித்திருக்க வேண்டும்.
ஆனால் முக்கியமான அந்த 3 ஆம் இடத்தில் ஏன் அக்சர் படேலை களமிறக்க வேண்டும்? அதுமட்டுமின்றி இந்திய அணியில் 8 பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது அக்சர் படேலை முன்கூட்டியே அனுப்பியது மிகவும் தவறு. ஒருவேளை முதல் விக்கெட்டாக இடது கை ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா ஆட்டமிழந்திருந்தால் கூட அக்சர் படேல் உள்ளே வருவது சரி என்று கருதலாம்.
ஆனால் இந்த விடயத்தில் வலது கை, இடது கை வீரர்கள் காம்பினேஷன் என்பது பிரச்சனையில்லை. ஆனாலும் உள்ளே அபிஷேக் சர்மா இருக்கும்போது சூரியகுமார் யாதவ் வந்திருக்கலாம். ஆனால் அவர் வராமல் அக்சர் படேல் உள்ளே வந்ததும் அபிஷேக் சர்மாவும் ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி 2 விக்கெட் விழுந்ததும் பொறுமையாக விளையாடிய அவர் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டும் அடித்தார்.
இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ் 3 ஆம் இடத்தில் இடத்தில் பேட்டிங் செய்ய வராததுக்கு இந்த பயம் தான் காரணம் – முகமது கைப் கருத்து
என்னை பொருத்தவரை 3 ஆம் இடத்தில் களமிறங்கும் வீரர் பவர்பிளே ஓவர்களுக்குள் எவ்வளவு ரன்களை அடிக்க முடியுமோ அவ்வளவு ரன்களை அடித்தாக வேண்டும். எனவே அந்த வகையில் பார்க்கையில் இந்திய அணியில் 8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் அக்சர் படேலுக்கு 3 ஆம் இடத்தினை வழங்கியது தவறு என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.