ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர்கள் சாய் கிஷோர், சாய் சுதர்சன் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதற்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடராஜன் வாய்ப்பு பெறாமல் பெஞ்சில் அமர்ந்திருப்பது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணிக்காக அபாரமாக பௌலிங் செய்த நடராஜன் யார்க்கர் பந்துகளை வீசி டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக வெற்றிகளில் பங்காற்றினார்.
அதன் வாயிலாக தமிழகத்தின் யார்க்கர் கிங் என்று ரசிகர்களிடம் பாராட்டுகளை வாங்கிய நடராஜன் இந்தியாவுக்காக அறிமுகமாகி 3 வகையான கிரிக்கெட்டிலும் கிடைத்த வாய்ப்பில் அசத்தினார். ஆனால் அதன் பின் காயத்தைச் சந்தித்ததால் அவருக்கு இன்னும் மறு வாய்ப்பு கிடைக்காதது வேறு கதை. ஐபிஎல் தொடரில் காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த அவரை இந்த வருடம் டெல்லி அணி 10.75 கோடி என்ற பெரியத் தொகைக்கு வாங்கியது.
10.75 கோடி எதுக்கு:
அதனால் ஆஸ்திரேலியாவின் யார்கர் கிங் மிட்சேல் ஸ்டார்க்குடன் சேர்ந்து நடராஜன் மிரட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆரம்பக்கட்டப் போட்டிகளில் லேசானக் காயத்தால் விளையாடாத நடராஜனுக்கு குணமடைந்த பின்பும் டெல்லி நிர்வாகம் இன்னும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அது பற்றி கேட்டதற்கு நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு தங்களுடைய அணியில் தற்சமயத்தில் இடமில்லை என்று டெல்லி அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் தெரிவித்தார்.
இந்நிலையில் வாய்ப்பில்லை என்று சொல்வதற்காகவா? நடராஜனை 10.75 கோடிக்கு வாங்கினீர்கள் என்று டெல்லி நிர்வாகத்தை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சாடியுள்ளார். மேலும் தடுமாற்றமாக பவுலிங் செய்யும் முகேஷ் குமாரை கழற்றி விட்டு நடராஜனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
நடராஜனுக்கு சான்ஸ் கொடுங்க:
“கடந்தப் போட்டியில் டெல்லி மிகவும் மோசமாக விளையாடி தோற்றது. அப்போது ஸ்டார்க் ஓவரை மீதம் வைத்து உங்களால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி எழுந்தது. அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே போல நடராஜன் விளையாடாததும் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அது பற்றி கேட்டதற்கு நடராஜனுக்கு தங்களுடைய அணியில் இடத்தை உருவாக்க முடியவில்லை என்று கெவின் பீட்டர்சன் சொன்னார்”
இதையும் படிங்க: வெளியேறும் தீபக் ஹூடா.. அடுத்த போட்டியில் மேலும் ஒரு இளம்வீரர் சி.எஸ்.கே அணியில் அறிமுகம் – விவரம் இதோ
“ஏன் அவருக்கு உங்களால் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை? முகேஷ் குமாரை வெளியே வைத்து நடராஜனுக்கு வாய்ப்புக் கொடுங்கள். நீங்கள் அவரைப் 10 கோடிக்கு வாங்கினீர்கள். அப்படி 10 கோடிக்கு வாங்கிய ஒரு வீரருக்கு உங்களுடைய அணியில் இடத்தை கொடுக்க முடியாவிட்டால் அது கைத்தட்டல்களுக்கு தகுதியான செயலாகும். அவருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்து விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறினார்.