- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கில்லை விட அவர் குறைஞ்சவாரா? துலீப் கோப்பை கேப்டன்ஷிப் கொடுக்காத கம்பீர் மீது ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூருவில் துவங்குகிறது. மொத்தம் 4 அணிகள் விளையாடும் அந்தத் தொடரில் விராட் கோலி, பும்ரா, அஸ்வின், ரோஹித் சர்மா ஆகியோருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய நட்சத்திர வீரர்கள் விளையாட உள்ளனர்.

அந்தத் தொடரில் விளையாடப் போகும் 4 அணிகளை பிசிசிஐ வெளியிட்டது. அந்த 4 அணிகளின் கேப்டன்களாக ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்தத் தொடரில் தமிழ்நாட்டில் இருந்து வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், சாய் கிஷோர், பாபா இந்திரஜித், ஜெகதீசன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

- Advertisement -

கேப்டன்ஷிப் பொறுப்பு:
இந்நிலையில் துலீப் கோப்பையில் சுப்மன் கில் போன்றவருக்கு கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் முதன்மை டெஸ்ட் வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படாதது ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதற்கு புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் அபிமன்யு ஈஸ்வரன் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் அவர் விளையாட உள்ளது பரவாயில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட ரிசப் பண்ட் கேப்டன்ஷிப் பெறக்கூடிய ஒரு வீரராக இல்லையா? அது எனக்கு கொஞ்சம் ஆச்சரியத்தை கொடுக்கிறது”

- Advertisement -

“ஏனெனில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் சிறந்த வீரராக செயல்படுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் அவர் தான் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சதமடித்த ஒரே விக்கெட் கீப்பர். வேறு யாரும் அதைச் செய்ததில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். எனவே என்னுடைய பார்வையில் அவர் கேப்டன்ஷிப் பொறுப்புக்கு தகுதியானவர்”

இதையும் படிங்க: துபேவின் இடத்துக்கு ஆபத்து.. 2 பந்தில் 2 விக்கெட்.. இங்கிலாந்தில் வெற்றியை தலைகீழாக மாற்றிய வெங்கடேஷ்

“இருப்பினும் சுப்மன் கில், ருதுராஜ், ஸ்ரேயாஸ், அபிமன்யு ஆகியோர் கேப்டன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிய சகாப்தம் துவங்கியுள்ளது. எனவே ரிசப் பண்ட் கேப்டனாக செயல்படுவது பற்றி கம்பீர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். ஏனெனில் சமீபத்திய இலங்கை ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை. 3வது போட்டியில் தான் ராகுலுக்கு பதில் களமிறங்கினார்” என்று கூறினார்.

- Advertisement -