இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியானது இன்று சண்டிகர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆண்ட்ரே ரசலின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 96 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 45 ரன்களையும், டோனவன் பெரேரா 38 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 96 ரன்கள் குவித்து மீண்டும் ஒருமுறை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார்.
கடந்த போட்டியில் 97 ரன்களில் ஆட்டமிழந்த வைபவ் சூரியவன்ஷி இந்த போட்டியிலும் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. இருந்தாலும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த போட்டியில் அவர் அடித்த 96 ரன்கள் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்ட்ரே ரசலின் மாபெரும் சாதனையை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட் – என்ன காரணம்?
ஐ.பி.எல் போட்டிகளில் 1000 ரன்களை குறைந்த பந்துகளில் அடித்த வீரராக ஆண்ட்ரே ரசல் 545 பந்துகளில் அடித்து முதலிடத்தில் இருந்தார். இவ்வேளையில் இன்றைய போட்டியில் தனது 440 ஆவது பந்தை சந்தித்தபோதே 1000 ரன்களை பூர்த்தி செய்து வைபவ் சூர்யவன்ஷி அந்த சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



