நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டனாக சாதனை படைத்து மகத்தான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய விக்கெட் கீப்பராகவும் அதிரடி ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார். குறிப்பாக 2011ஆம் ஆண்டு சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து உலக கோப்பையை வென்று காட்டிய அவர் 2013 சாம்பியன்ஸ் சார்பில் தாம் உருவாக்கிய விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களை வைத்து சாம்பியன் பட்டம் வென்று காட்டினார்.
அந்த வகையில் இன்றைய இந்திய அணியின் வளமான வருங்காலத்தை அன்றே கட்டமைத்த அவர் அதன் காரணமாக சில ஜாம்பவான் வீரர்களுக்கு கேரியரின் கடைசி சமயங்களில் கௌரவமாக ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு கொடுக்காமல் மொத்தமாக கழற்றி விட்டதை பற்றி பார்ப்போம்:
1. விரேந்தர் சேவாக்: டெஸ்ட் போட்டிகளில் 2 முச்சதங்கள் அடித்து அதிரடி என்னும் வார்த்தைக்கு உண்மையான இலக்கணத்தை காண்பித்து இந்திய கிரிக்கெட்டின் மகத்தான தொடக்க வீரராக செயல்பட்ட இவர் 2011 உலகக்கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஆனால் அதன்பின் சுமாரான ஃபிட்னஸ் கடைப்பிடித்து மெதுவாக ஃபீல்டிங் செய்வதாக கருதி அவரை கழற்றி விட்ட தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக அறிமுகப்படுத்தினார்.
அதை இறுக்கமாக பிடித்த ரோகித் சர்மா இரட்டை சதங்களை அடித்து இன்று ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்த துவங்கியதால் மேற்கொண்டு சேவாக் பக்கம் தோனி திரும்பவில்லை. மேலும் ஐபிஎல் தொடர்களிலும் சுமாராகவே செயல்பட்ட சேவாக் 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்காக கடைசியாக விளையாடி ஓய்வு பெற்றார்.
2. கௌதம் கம்பீர்: தோனி 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை கேப்டனாக வெல்வதற்கு மாபெரும் ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் அடித்து இவர் முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. அந்த வகையில் முதன்மை தொடக்க வீரராக இருந்த இவரை வருங்காலத்தில் கருத்தில் கொண்டு 2012க்குப்பின் கழற்றி விட்ட தோனி இடது கை வீரரான சிகர் தவானுக்கு 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் வாய்ப்பு கொடுத்தார்.
அதில் தங்க பேட் விருது வென்று கோப்பையை வெல்வதற்கு தவான் முக்கிய பங்காற்றியதால் 2012, 2014 ஐபிஎல் கோப்பைகளை வென்றும் கம்பீரை கண்டுகொள்ளாத தோனி மொத்தமாக கழற்றி விட்டார். அதனாலேயே இப்போதும் தோனியை பற்றி சமயம் கிடைக்கும் போதெல்லாம் கம்பீர் தடாலடியாக விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
3. ஹர்பஜன் சிங்: 2000 முதல் சிறப்பாக செயல்பட்டு முதன்மை ஸ்பின்னராக 2011 உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இவரையும் தொலைநோக்கு பார்வையுடன் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட தோனி தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதை இறுக்கமாக பிடித்த அஸ்வின் அவரை மிஞ்சும் அளவுக்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த துவங்கினார்.
அதனால் 2016 டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்தும் தம்மை மொத்தமாக பெஞ்சில் அமர வைத்து கழற்றி விட்ட காரணத்தாலேயே தோனி மீது ஹர்பஜன் சிங் அவ்வப்போது விமர்சனங்களையும் வன்மத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.
4. ஆஷிஷ் நெஹ்ரா: 2003 உலகக்கோப்பையில் முதன்மை பவுலராக விளையாடி 2011இல் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இவருக்கு பதிலாக 2012 வாக்கில் புவனேஸ்வர் குமார் பிரவீன், குமார் போன்ற இளம் ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைத்தனர். அதன் காரணமாக அடுத்த 5 வருடத்திற்கு இவரை தேர்வு செய்யாத தோனி தொடர்ந்து இளம் வீரர்களுக்கே வாய்ப்பு கொடுத்தார்.
இதையும் படிங்க:துலீப் கோப்பை : சாய் கிஷோர் கலக்கல் ஃபினிஷிங் – வடக்கு அணியின் மிகவும் கேவலமான திட்டத்தை உடைத்த தெற்கு அணி
இருப்பினும் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் போராடி 2016 டி20 உலக கோப்பையில் கம்பேக் கொடுத்த நெஹ்ரா இனிமேலும் நமக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காது என்பதை உணர்ந்து 2017ஆம் ஆண்டு தம்முடைய சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஒரு டி20 போட்டியுடன் கௌரவமாக ஓய்வு பெற்றார்.