ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசதினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்திடம் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. அத்தொடரில் விராட் கோலி, சூர்யகுமார் தவிர்த்து சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா போன்ற பெரும்பாலான சீனியர் கிரிக்கெட் வீரர்களை கழற்றி விட்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்குமாறு ரசிகர்கள் வைத்த கோரிக்கைக்கு செவிசாய்த்த பிசிசிஐ முதலில் தேர்வுக்குழுவை அடியோடு நீக்கியுள்ளது.
அத்துடன் ஏற்கனவே மறைமுகமாக ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டதால் வரும் காலங்களில் டி20 கிரிக்கெட்டில் இளம் அணியை பார்க்கலாம். அதன் காரணமாக நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக தங்களது கேரியரில் கடைசி போட்டியில் விளையாடி முடித்து விட்டார்கள் என்று சொல்லக்கூடிய 3 வீரர்களை பற்றி பார்ப்போம்:
3. தினேஷ் கார்த்திக்: கடைசியாக கடந்த 2019இல் விளையாடி 2021இல் வர்ணனையாளராக அவதரித்ததால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட இவர் 2022 ஐபிஎல் தொடரில் அதிரடியாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து ஆச்சரியப்படும் வகையில் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்தார். அதில் சாதாரண இருதரப்பு தொடர்களில் அசத்திய அவர் அழுத்தமான உலக கோப்பைகளில் வாய்ப்பு பெற்ற 4 போட்டிகளிலும் பேட்டிங் – விக்கெட் கீப்பிங் ஆகியவற்றில் சிறு சிறு விஷயங்களில் கூட மொத்தமாக சொதப்பினார்.
மேலும் 2007 – 2022 வரை உலக கோப்பையில் களமிறங்கிய எந்த போட்டியிலும் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 20 ரன்களை கூட எடுக்காமல் அவர் மோசமாக செயல்பட்டது தமிழக ரசிகர்களையே ஏமாற்றமடைய வைத்தது. மேலும் 37 வயதை கடந்து விட்ட இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிசான் என அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பர்களும் பினிஷர்களும் குவிந்து கிடக்கிறார்கள். அதனால் இந்தியாவுக்காக இனிமேல் இவர் விளையாடுவதை 100% பார்க்க முடியாது என்றே கூறலாம். அதற்கு எடுத்துக்காட்டாகவே நியூசிலாந்து தொடரில் இவர் கழற்றி விடப்பட்டார்.
2. ரவிச்சந்திரன் அஷ்வின்: ஒரு காலத்தில் முதன்மை ஸ்பின்னராக இருந்த இவர் 2017க்குப்பின் கழற்றி விடப்பட்டாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2021 டி20 உலக கோப்பையில் ஆச்சரியப்படும் வகையில் நேரடியாக தேர்வாகி கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது விளையாடி வந்தார். அதில் குறைவான ரன்களை கொடுத்தாலும் விக்கெட் எடுக்கும் பவுலராக செயல்படுவதில்லை என்ற விமர்சனங்கள் இவர் மீது இருந்தது.
அதையும் தாண்டி இந்த உலகக் கோப்பையில் தேர்வான அவர் பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக்கை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் முதன்மை வேலையான பந்து வீச்சில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறினார். அதனால் 36 வயதை கடந்து விட்ட இவர் வரும் காலங்களில் ஐபிஎல் தொடரில் அசத்தினாலும் கூட சஹால் முதல் தீபக் ஹூடா வரை ஏராளமான இளம் ஸ்பின்னர்கள் இருப்பதால் வாய்ப்பு கிடைப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இளம் அணியை உருவாக்கும் முயற்சி துவங்கியுள்ளதால் இவரும் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடி முடித்து விட்டார் என்ற கூறலாம். அதனாலேயே இவரும் நியூசிலாந்து தொடரில் கழற்றி விடப்பட்டார்.
1. முகமது ஷமி: டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மிரட்டும் இவர் டி20 கிரிக்கெட்டில் ரன்களை வாரி வழங்குபவராகவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்ட இவரை ஏற்கனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்தோடு இந்திய அணி நிர்வாகம் மொத்தமாக கழற்றி விட்டது.
இருப்பினும் ஐபிஎல் 2022 தொடரில் முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பை வெல்லும் அளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இவர் கடைசி நேரத்தில் ஜஸ்பிரிட் பும்ரா காயத்தால் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உலக கோப்பைக்கு நேரடியாக மீண்டும் தேர்வானார். ஆனால் மீண்டும் இந்த உலகக் கோப்பையில் முக்கியமான போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீசாத அவர் ரன்களை வாரி வழங்கினார்.
அதனால் 32 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் வரும் காலங்களில் ஐபிஎல் தொடரில் அசத்தினாலும் கூட உம்ரான் மாலிக், அர்ஷிதீப், மோசின் கான் என விதவிதமான புதிய இளம் பவுலர்கள் வந்து விட்டதால் டி20 அணியில் விளையாடுவது 99% கடினமாகவே பார்க்கப்படுகிறது.