IND vs AUS : இவருக்கு 19வது ஓவரில் கண்டம், கேரியரில் மோசமான சாதனை படைத்த புவி – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

Rohit Sharma Bhuvneswar Kumar
- Advertisement -

ஆசிய கோப்பை தோல்விக்கு பின்பாக சொந்த மண்ணில் நடப்பு டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா எதிர்கொள்கிறது. இத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 20ஆம் தேதியான நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இரவு 7 மணிக்கு துவங்கிய நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 208/6 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 11 (9) விராட் கோலி 2 (7) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏற்படுத்திய பின்னடைவை மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 55 (35) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 46 (25) ரன்களும் எடுத்து சரி செய்தனர்.

அந்த நிலைமையில் தினேஷ் கார்த்திக் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 6 ரன்களில் அவுட்டனாலும் 5வது இடத்தில் களமிறங்கி பட்டைய கிளப்பிய ஹர்திக் பாண்டியா 7 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதமடித்து 71* (30) ரன்களை விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக நேதன் எலிஸ் 3 விக்கட்டுகள் எடுக்க 209 என்ற கடினமான இலக்கை துரத்திய அந்த அணி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அபாரம்:
குறிப்பாக கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடியாக 22 (13) ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 61 (30) தெறிக்கவிட்டு அவுட்டானார். அவருக்கு பின்பாக ஸ்டீவ் ஸ்மித் 35, கிளன் மேக்ஸ்வெல் 1, ஜோஸ் இங்கிலீஷ் 17 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அவுட்டானதால் ஏற்பட்ட பின்னடைவை கடைசி நேரத்தில் களமிறங்கி 6 பவுண்டரி 2 சிக்சர்களை பறக்கவிட்ட மேத்யூ வேட் 45* (31) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.2 ஓவரில் 211/6 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

மறுபுறம் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்ட இந்தியா பந்துவீச்சில் மொத்தமாக சொதப்பி சொந்த மண்ணில் தலை குனியும் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 3 வருடங்கள் கழித்து திரும்பிய உமேஷ் யாதவ் மற்றும் காயத்திலிருந்து திரும்பிய ஹர்ஷல் படேல் ஆகியோருக்கும் சேர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டிய சீனியர் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் போட்டியின் முதல் பந்திலேயே ஆரோன் ஃபின்ச்சிடம் சிக்சர் கொடுத்து வள்ளலாக பந்துவீச தொடங்கினார்.

- Advertisement -

19வது கண்டம்:
அதிலும் கடைசி 2 ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட போது 19வது ஓவரை வீசிய அவர் 16 ரன்களை வாரி வழங்கி கொஞ்சமும் போராடாமல் வெற்றியை வெற்றியை பரிசளித்தார். சமீபத்திய ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் இதே போல் 19வது ஓவரில் எதிரணிக்கு முறையே 25, 21 ரன்கள் தேவைப்பட்ட போது கொஞ்சமும் அனுபவத்தை காட்டாத அவர் முறையே 19, 14 ரன்களை கொடுத்தது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் கொஞ்சம் கூட முன்னேறாமல் மீண்டும் அதே 19வது ஓவரில் மோசமான செயல்பட்டதை பார்க்கும் ரசிகர்கள் 19வது ஓவரில் இவருக்கு கண்டம் என்பதால் ஆஸ்திரேலியா கண்டத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இவரை வைத்து இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறதோ என்று கவலை தெரிவிக்கிறார்கள். அது தெரிந்தும் மீண்டும் அவரிடமே 19வது ஓவரை கொடுக்கும் ரோஹித்தையும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

மேலும் பவர்பிளே தவிர எஞ்சிய அனைத்து ஓவர்களிலும் ரன்களை வாரி வழங்கும் இவரை விட நேற்று வந்த அரஷ்தீப் சிங் சமீபத்திய ஆசிய கோப்பையின் டெத் ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுத்து 34 ரன்களை மட்டும் கொடுத்தார். ஆனால் 10 வருடத்திற்கு மேலாக விளையாடிய அனுபவம் கொண்ட இவர் ஆசிய கோப்பை மற்றும் நேற்றைய போட்டியையும் சேர்த்து டெத் ஓவர்களில் 1 விக்கெட் கூட எடுக்காமல் 63 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.

மோசமான சாதனை:
மேலும் பொதுவாகவே துல்லியமாக தரமாக பந்துவீச கூடிய புவனேஸ்வர் இதுவரை 78 போட்டிகளில் 84 விக்கெட்களை 6.96 என்ற எக்கனாமியில் எடுத்து வந்தாலும் நேற்றைய போட்டியில் தன்னுடைய கேரியரில் முதல் முறையாக ஒரு போட்டியில் 50 ரன்களை கடந்து 52 ரன்களை வாரி வழங்கினார். இப்படி அனுபவத்தை காட்டாமல் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக மிரட்டலாக பந்து வீசும் அவர் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியிடம் மண்ணைக் கவ்வியதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Advertisement