இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 19 டெஸ்ட் போட்டிகள், 1 ஒருநாள் போட்டி மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது கரியரின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தாலும் மூன்று வகையான இந்திய அணியிலும் நிரந்தர துவக்க வீரராக மாறும் திறன் உடையவராக ஜெய்ஸ்வால் பார்க்கப்படுகிறார்.
தனது முடிவை வாபஸ் பெற்ற யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :
அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ள வீரர்களில் ஜெய்ஸ்வாலும் ஒருவர். தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான துவக்க வீரருக்கான இடத்தினை உறுதி செய்துள்ள அவர் விரைவில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் நிரந்தர இடத்தினை பிடித்துவிடுவார் என்று தெரிகிறது.
உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்த அவர் கடந்த சீசனிலும் மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடியிருந்தார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு 2025 ஐபிஎல் தொடரின் போது அவர் மும்பை மாநில அணியில் இருந்து வெளியேறி கோவா மாநில அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
அதன் காரணமாக தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி மும்பை மாநில கிரிக்கெட் வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தார். கோவா மாநில அணியும் அவரை வரவேற்று கேப்டன் பதவியை வழங்க இருந்ததாலே அவர் அந்த முடிவை எடுத்தார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் தனது முடிவை மாற்றியுள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் கோவா அணிக்காக விளையாட வேண்டாம் என்றும் மீண்டும் மும்பை அணிக்காகவே விளையாட விருப்பம் தெரிவித்து அந்த முடிவினை வாபஸ் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கிறிஸ் கெய்ல் மாதிரி அவரை சிஎஸ்கே வாங்குனது மாஸ்டர்ஸ்ட்ரோக்.. 10 வருடத்தில் சிறந்த முடிவு.. டாம் மூடி பாராட்டு
அதோடு தனக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டாம் என்றும் தான் மும்பை அணிக்காகவே விளையாட விரும்புகிறேன் என மீண்டும் மும்பை மாநில கிரிக்கெட் சங்கத்திடம் கூறியுள்ளார். இப்படி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் திடீரென மனம் மாறியதற்கு காரணமே அவர்கள் குடும்பம் தான் என்று கூறப்படுகிறது .