ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.
இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது டெல்லி அணியின் வெற்றிக்கு அப்போது 3 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இந்த போட்டியில் நன்றாக வீசிக்கொண்டிருந்த கலீல் அகமதுக்கு 2 ஓவர்கள் இருந்தன. ஆனால், அவரை விட்டுவிட்டு புதிதாக யோசிக்கிறேன் என்று முக்கியமான 18 ஆவது ஓவரை பாசில் தம்பியிடம் வீச கொடுத்தார் வில்லியம்சன்.
ஆனால், அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட பண்ட் அந்த ஓவரில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 22 ரன்களை அடித்தார். அதனால் டெல்லி அணியின் வெற்றி அந்த ஒரே ஓவரிலேயே கிட்டத்தட்ட முடிவானது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை 18 மற்றும் 20 ஆகிய ஓவரை கலீல் அகமது வீசியிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர்.