- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : 450 அடிச்சிருந்தாலும் நாங்க செய்ஞ்சிருப்போம், இது ஆரம்பமே – உலகையே எச்சரிக்கும் இங்கிலாந்து கேப்டன்

இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்ற அந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காமில் துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் போராடி 416 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 98/5 என திணறிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் சதமடித்து 146 ரன்களும் ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு சுருண்டது. ஜோ ரூட் கேப்டன், பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய இங்கிலாந்து:
அதனால் 132 ரன்களை முன்னிலையாக பெற்ற இந்தியா 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பி வெறும் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் மீண்டும் ஏமாற்றிய நிலையில் அதிகப்பட்சமாக புஜாரா 66 ரன்களும் பண்ட் 57 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 378 என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து தொடக்க வீரர்களின் அதிரடியால் 107/0 என்ற வலுவான தொடக்கத்தை பெற்று அசத்தியது.

அப்போது 3 விக்கெட்களை அடுத்தடுத்து சாய்த்து இந்தியா பதிலடி கொடுத்தாலும் அடுத்ததாக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்த ஜோ ரூட் 142* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 114* ரன்களும் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தனர். அதனால் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சரித்திர சாதனை படைத்த இங்கிலாந்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையில் திணறிய இங்கிலாந்து புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் வந்தபின் தலைகீழாக மாறி அதிரடியால் முரட்டுத்தனமான அணியாக மாறியுள்ளது.

- Advertisement -

முரட்டு இங்கிலாந்து:
1. ஏனெனில் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நிர்ணயிக்கப்பட்ட 275 இலக்கை 78.5 ஓவரிலும், 299 இலக்கை 50 ஓவரிலும், 296 இலக்கை 54.2 ஓவரிலும் வெறித்தனமாக சேஸிங் செய்து வெற்றி பெற்ற அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 378 ரன்களை 76.4 ஓவரில் அசால்டாக சேஸிங் செய்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக 250க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற உலக சாதனை படைத்துள்ளது.

2. அதேபோல் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 57 முறை மட்டுமே 275+ ரன்கள் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்டுள்ளன. அதில் 4 சேசிங்கை அதுவும் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் புதிதாக புத்துணர்ச்சியடைந்துள்ள இங்கிலாந்து செய்து காட்டியுள்ளது.

- Advertisement -

450 ரன்கள்:
முன்னதாக இப்போட்டியில் இந்தியா 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்க முடியாது என்று நிறைய இந்திய ரசிகர்கள் பேசுகின்றனர். ஆனால் 450 ரன்களை அடுத்திருந்தாலும் இந்தியாவை அடித்து நொறுக்கி நிச்சயம் சேசிங் செய்திருப்போம் என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கெத்தாக பேசியுள்ளார். நியூசிலாந்து தொடரை முடித்துவிட்டு இந்தியாவுக்கு தோல்வியை பரிசளிப்போம் என்று ஏற்கனவே எச்சரித்த அவர் சொன்னது போல செய்து காட்டியுள்ளார்.

அத்துடன் அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட் என்றால் மெதுவாக விளையாட வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை மாற்றி இனிமேல் அதிரடியாக விளையாடப் போகிறோம் என்று ஒட்டுமொத்த உலகிற்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் (இந்தியா) 450 ரன்களை அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நான் பார்க்க விரும்பினேன். 3-வது இன்னிங்சில் விளையாடும் எதிரணியினர் 4-வது இன்னிங்சில் நாங்கள் எவ்வாறு விளையாடப் போகிறோம் என்பதை நினைத்து கவலைப்பட வேண்டும்.

- Advertisement -

இந்தியா போன்ற எதிரணிகளுக்கு முன்னிலை பெற்ற போதும் 3-வது இன்னிங்சில் எப்படி விளையாட வேண்டும் என்று தெரியவில்லை” “இனிமேல் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் குறிப்பாக இங்கிலாந்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை மாற்றி எழுதப் போகிறோம். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றை எழுத விரும்புகிறோம்.

இதையும் படிங்க : IND vs ENG : விராட் கோலியை விமர்சித்த இங்கிலாந்து வாரியம் – இணையத்தில் வெளுத்து வாங்கிய ரசிகர்கள். என்ன நடந்தது?

அதற்காக கடந்த நான்கைந்து வாரங்களில் ரசிகர்களிடம் கிடைத்த ஆதரவு அபாரமாக உள்ளது. இதுபோன்ற ஆட்டம் வருங்கால சந்ததியினரை மேலும் சிறப்பாக விளையாட உத்வேகத்தை கொடுக்கும். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்” என்று பேசினார்.

- Advertisement -
Published by