2007 முதல் 2022 வரை மாறாத பவுல் அவுட் வெற்றி – ஜாம்பவான்களின் வைரல் வீடியோவால் காலரை தூக்கும் இந்திய ரசிகர்கள்

Bowl OUT
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 9வது முறையாக ஐசிசி டி20 உலகக் கோப்பை கோலாகலமாக நடைபெற உள்ளது. ரசிகர்களை கவர்வதற்காக துவங்கப்பட்ட 20 ஓவர் போட்டிகளின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2007இல் வரலாற்றில் முதல் முறையாக டி20 உலக கோப்பை நடைபெற்றது. அதில் எம்எஸ் தோனி எனும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாதவர் தலைமையில் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்களுடன் சொல்லி அடித்த இந்தியா யுவராஜ் சிங்கின் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் உட்பட ஒவ்வொரு போட்டியிலும் மேஜிக் நிகழ்ச்சி யாருமே எதிர்பாராத வகையில் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

அந்த தொடரை பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக துவங்கிய இந்தியா அதே அணிக்கு எதிராக இறுதிப் போட்டியிலும் கோப்பையை வென்றது. அதிலும் ஜோகானஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் இந்திய ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் வகையில் பேட்டிங் செய்த மிஸ்பா-உல்-ஹக் கிட்டத்தட்ட தோல்வியை உறுதியாக்கினார்.

- Advertisement -

ஆனால் கேப்டன் தோனியின் யாருமே எதிர்பாராத சிந்தனையும் ஜோஹிந்தர் சர்மாவின் தைரியமும் மிஸ்பாவின் தேவையற்ற குருட்டு நம்பிக்கையும் இறுதியில் தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த இந்தியாவுக்கு வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பரிசாகக் கொடுத்தது. அந்த ஃபைனலை இப்போது நினைத்தால் கூட இந்திய ரசிகர்களுக்கு புல்லரிக்கும் என்றே கூறலாம்.

மறக்க முடியாத பவுல்-அவுட்:
அதை விட அந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியை அதே பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா துவக்கிய விதத்தையும் ரசிகர்கள் மறக்க முடியாது. டர்பன் நகரில் நடைபெற்ற தன்னுடைய முதல் லீக் போட்டியில முதலில் பேட்டிங் செய்த இந்தியா 141/8 ரன்கள் எடுக்க அதை துரத்திய பாகிஸ்தானும் 20 ஓவர்களில் சரியாக 141/7 ரன்கள் எடுத்ததால் போட்டி டையில் முடிந்தது. அதனால் அந்த சமயத்தில் சூப்பர் ஓவர் பிரபலமில்லாத நிலைமையில் வெற்றியை தீர்மானிப்பதற்காக கால் பந்தாட்டத்தில் பயன்படும் பவுல் அவுட் முறை வரலாற்றிலேயே முதல் முறையாக கொண்டுவரப்பட்டது.

- Advertisement -

அதில் ஸ்டம்பை குறி பார்த்து அடிக்க 5 வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்தியா சார்பில் வீரேந்திர சேவாக், ராபின் உத்தப்பா, ஹர்பஜன்சிங் ஆகியோர் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்துவதை போல் பின்புறத்தில் தோனி அமர்ந்திருந்ததை பயன்படுத்தி துல்லியமாக பந்து வீசி முதல் 3 வாய்ப்புகளில் சரியாக அடித்தனர். ஆனால் தோனியின் யுக்தியை பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் கவனிக்க தவறிய நிலையில் ஷாஹித் அப்ரிடி, உம்ரா குல் போன்ற பாகிஸ்தான் பவுலர்கள் ஒருமுறை கூட ஸ்டம்பை அடிக்காமல் கோட்டை விட்டதால் கிடைத்த வெற்றியை யுவராஜ் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் துள்ளி குதித்து கொண்டாடியதை மறக்கவே முடியாது.

இந்தியாவின் கெத்து:
16 வருடங்கள் கடந்தும் அந்த நிகழ்வு ரசிகர்களின் நினைவுகளில் இன்னும் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் நிலையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் அந்த தருணத்தை இந்தியா பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் மீண்டும் நிகழ்த்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஆசிய கோப்பையில் வர்ணனையாளராக பணியாற்றிய இந்தியா பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்கள் டீம் ப்ளூ மற்றும் டீம் க்ரீன் என்ற 2 பிரிவுகளாக பிரிந்து பவுல் அவுட் போட்டியில் ஈடுபட்டனர்.

அதில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய வாரியத் தலைவர் ரமீஷ் ராஜா முதல் பந்திலேயே ஸ்டம்ப்பை அடிக்க தவற விட்ட நிலையில் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கச்சிதமாக அடித்து கொண்டாடினார். அதன் பின் பாகிஸ்தானின் ஆமிர் சோஹைல் தவற விட்ட ஸ்டம்பை இந்தியாவின் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் சரியாக அடித்து கொண்டாடினார்.

அப்போது நான் சரியாக அடிப்பேன் என்று வாயால் பேசிய பாகிஸ்தானின் சோயப் அக்தர் செயலில் காட்டத் தவறி தலையை தொங்கப் போட்டார். ஆனால் தமிழகத்தின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் 3வது பந்தை சரியாக வீசி இந்திய ஜாம்பவான்கள் அணியை வெற்றி பெற வைத்தார். இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் சில விஷயங்கள் எப்போதுமே மாறாது என்றும் 2007 மட்டுமல்ல எப்போதுமே பவுல் அவுட் என்றால் அதனுடைய சாம்பியன் இந்தியா தான் என்று காலரை தூக்குகின்றனர்.

Advertisement