நியூசிலாந்துக்கு எதிராக முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்று தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா அடுத்ததாக நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியில் தோற்று 2வது போட்டியில் போராடி வென்றது. அந்த நிலைமையில் பிப்ரவரி 1ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 234/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கிய சுப்மன் கில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரராக சாதனை படைத்து 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் 126* (63) ரன்கள் விளாசினார்.
அவருடன் ராகுல் திரிபாதி 44 (22) ரன்களும் கேப்டன் பாண்டியா 30 (17) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 235 என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து மிரட்டலாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 12.1 ஓவரில் வெறும் 66 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 35 (25) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பாண்டியாவின் செயல்:
அதனால் 168 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக உலக சாதனை படைத்தது. அந்த வெற்றியால் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதையும் உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்துள்ள இந்தியா விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே அதிரடி வெற்றி பெற்று ரசிகர்களைப் பெருமையடைய வைத்துள்ளது.
முன்னதாக ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத இந்த தொடரில் பெரும்பாலும் வாய்ப்பு பெற்ற இளம் வீரர்களுக்கு மத்தியில் பிரிதிவி ஷா கடைசி வரை பெஞ்சில் அமர்ந்திருந்தது நிறைய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. கடந்த 2018 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அறிமுக டெஸ்ட் போட்டியிலே சதமடித்து அசத்திய அவர் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை.
கடைசியாக கடந்த 2021 ஜூன் மாதம் இலங்கையில் இந்தியாவுக்காக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரிலும் சுமாராகவே செயல்பட்டார். இருப்பினும் அதன் பின் மனம் தளராமல் போராடி உடல் எடையை குறைத்து 2022 சயீத் முஷ்டக் அலி உள்ளூர் டி20 தொடரில் அதிரடியாக செயல்பட்ட அவர் தேர்வுக்குழு கதவை தட்டினார். ஆனால் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட அவர் சமீபத்திய ரஞ்சிக் கோப்பையில் முச்சதம் விளாசி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் ஒரு வழியாக 550 நாட்கள் கழித்து இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார்.
Captain @hardikpandya93 collects the @mastercardindia trophy from BCCI president Mr. Roger Binny & BCCI Honorary Secretary Mr. Jay Shah 👏👏
Congratulations to #TeamIndia who clinch the #INDvNZ T20I series 2️⃣-1️⃣ @JayShah pic.twitter.com/WLbCE417QU
— BCCI (@BCCI) February 1, 2023
இருப்பினும் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் இரட்டை சதமடித்த காரணத்தால் வாய்ப்பைப் பெற்ற இசான் கிசான் இந்த தொடர் மட்டுமல்லாமல் கடைசி 14 டி20 போட்டிகளில் அரை சதமடிக்காமல் மோசமாக செயல்பட்டு வருவதால் பிரிதிவி ஷா’க்கு வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கைகள் குவிந்தன. ஆனால் கடைசி வரை வாய்ப்பு கொடுக்காத ஹர்திக் பாண்டியா அதற்காக விமர்சனங்களையும் சந்தித்துள்ள நிலையில் இத்தொடரின் கோப்பையை வாங்கியதும் அதை நேராக சென்று பிரிதிவி ஷா கையில் கொடுத்தார்.
அதை சற்றும் எதிர்பாராத பிரிதிவி ஷா ஆச்சரியத்துடன் பார்த்து சற்று கனத்துடன் இருந்த அந்த கோப்பையை தூக்க முடியாமல் தூக்குவது போல் ரியாக்சன் கொடுத்தார். இறுதியில் இந்திய அணியினருக்கு மத்தியில் சென்ற அவர் கோப்பையை உயர்த்தி இந்தியாவின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். அதை பார்க்கும் ரசிகர்கள் “வாய்ப்பு தான் கொடுக்கல இந்த கோப்பையையாவது வைத்துக்கொள்” என்ற வகையில் செயல்பட்டு பிரிதிவி ஷா ஆதங்கத்தை பாண்டியா அமைதி படுத்தியதாக கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: வீடியோ : 150 கி.மீ பந்தால் ஸ்டம்ப்பை தெறிக்க விட்ட உம்ரான் மாலிக் – பெய்ல்ஸ் எங்கே பறந்தது தெரியுமா? ரசிகர்கள் வியப்பு
மேலும் பொதுவாகவே இந்திய கேப்டன்கள் அணியின் இளம் வீரரிடம் கோப்பையை ஒப்படைக்கும் வழக்கம் இருந்து வரும் நிலையில் அடுத்து வரும் தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு கொடுக்குமாறு பாண்டியாவிடம் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.