வீடியோ : கதை முடிந்ததாக நினைத்த கடைசி ஓவரை தில்லாக வீசி த்ரில் வெற்றி பெற வைத்த அக்சர் படேல் – ரசிகர்கள் பாராட்டு

- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா 2023 புத்தாண்டை வெற்றிடன் துவக்கியுள்ளது. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 3ஆம் தேதியன்று நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் வந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்வகிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 162/5 ரன்கள் சேர்த்தது. சுப்மன் கில் 7, சூர்யகுமார் யாதவ் 7, சஞ்சு சாம்சன் 5 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிரடி காட்ட முயன்ற இசான் கிசான் 37 (29) ரன்களிலும் ஹர்டிக் பாண்டியா 29 (27) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 94/5 என தடுமாறிய இந்தியா 150 ரன்களை தாண்டாது என்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது 6வது விக்கெட்டுக்கு இணைந்து டெத் ஓவர்களில் இலங்கை பவுலர்களை வெளுத்து வாங்கி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய தீபக் ஹூடா 1 பவுண்டரி 4 சிக்சருடன் 41* (23) ரன்களும் அக்சர் படேல் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31* (20) ரன்களும் எடுத்து காப்பாற்றினார்.

- Advertisement -

தில்லான அக்சர்:
அதை தொடர்ந்து 163 ரன்களை துரத்திய இலங்கையும் இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சில் நிஷாங்கா 1, டீ சில்வா 8, அஸலங்கா 12, ராஜபக்சா 10, குசால் மெண்டிஸ் 28 என முக்கிய வீரர்களின் விக்கெட்டை குறைவான ரன்களுக்கு இழந்து 68/5 என தடுமாறியது. ஆனால் மிடில் ஓவரில் ஆனதாகட்டும் என்ற வகையில் வெளுத்து வாங்கிய வணிந்து ஹசரங்கா 1 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 21 (10) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் சனாக்கா 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 45 (27) ரன்கள் எடுத்து பினிஷிங் செய்ய முடியாமல் அவுட்டானதால் இந்தியாவின் வெற்றி பிரகாசமானது.

ஆனால் கடைசி நேரத்தில் சிக்ஸரை பறக்க விட்ட சமிக்கா கருணரத்னே போராடியதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. அதனால் கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட போது சிவம் மாவி, உம்ரான் மாலிக் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர்கள் முடிந்த நிலையில் முதன்மை ஸ்பின்னர் சஹால் 2 ஓவர்களில் ஏற்கனவே 26 ரன்களை வாரி வழங்கி சுமாரான பார்மில் தவித்தார். அதன் காரணமாக எஞ்சியிருந்த அக்சர் படேல் ஏற்கனவே 2 ஓவரில் 21 ரன்கள் கொடுத்திருந்தும் அவரிடம் நம்பி கேப்டன் பாண்டியா கடைசி ஓவரை கொடுத்தார்.

- Advertisement -

பொதுவாக கடைசி ஓவர் ஸ்பின்னர்கள் வீசுவது பெரும்பாலான சமயங்களில் வெற்றியை கொடுக்காது என்பதால் இந்திய ரசிகர்கள் தோல்வியை உறுதியென்று கவலையடைந்தனர். ஏனெனில் ஸ்பின்னர்களின் ஏதேனும் பந்துகளை பேட்ஸ்மேன்கள் முரட்டுத்தனமாக அடித்து சிக்ஸர் பறக்கவிட்டு வெற்றியை பறிப்பது சாதாரணமாகும். ஆனால் தில்லாக வீசிய அக்சர் படேல் முதல் பந்தில் ஒய்டு வீசி முதலிரண்டு 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்தார். ஆனால் 3வது பந்தில் லாங் ஆன் திசையில் பெரிய சிக்சரை பறக்க விட்ட கருணரத்னே மீண்டும் இந்திய ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தார்.

இருப்பினும் சுதாரித்த அக்சர் படேல் 4வது பந்தில் ரன் கொடுக்காத நிலையில் 5வது பந்தில் 2 ரன் எடுக்க முயற்சித்த கருணரத்னே எதிர்ப்புற பேட்ஸ்மேன் ரஜிதா ரன் அவுட்டானதால் 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனால் பரபரப்பான கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது மீண்டும் தைரியமாக பந்து வீசிய அக்சர் பட்டேலிடம் பவுண்டரி அடிக்க முடியாத கருணரத்னே 2 ரன் எடுக்க முயற்சித்த போது எதிர்ப்புறம் இருந்த மதுசங்கா ரன் அவுட்டானதால் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

இதையும் படிங்கIND vs SL : இது நாங்க ஜெயிச்சிருக்க வேண்டிய மேட்ச். கஷ்டமா இருக்கு – தோல்விக்கு பின் தசுன் ஷனகா வருத்தம்

அதனால் 23* (16) ரன்கள் எடுத்து அவர் போராடிய போதிலும் 20 ஓவரில் இலங்கையை 160 ரன்களுக்கு அவுட்டாக்கிய இந்தியா த்ரில் வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. பந்து வீச்சில் அதிகபட்சமாக சிவம் மாவி 4 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தீபக் ஹூடா ஆட்டநாயகன் விருதை வென்றார். இருப்பினும் கதை முடிந்ததாக கருதப்பட்ட கடைசி ஓவரில் தில்லாக பந்து வீசி புத்தாண்டு வெற்றியை பினிஷிங் செய்த அக்சர் படேலை ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள்.

Advertisement