ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதனால் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்த ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்தது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பலாக செயல்பட்டு மோசமாக தோற்ற இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற கடைசி போட்டியில் நிச்சயம் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
அந்த நிலைமையில் மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் துவங்கிய முக்கியமான கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. குறிப்பாக இம்முறை பிட்ச் பிளாட்டாக இருப்பதாக கருதிய ஸ்டீவ் ஸ்மித் தங்களது அணியில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் முகமது சிராஜுக்கு பதில் முகமது ஷமி சேர்க்கப்படுவதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார்.
போராடும் இந்தியா:
அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே நிதானத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜா – டிராவிஸ் ஹெட் ஓப்பனிங் ஜோடி இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தது. குறிப்பாக 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு பெரிய தொல்லை கொடுத்த இந்த ஜோடியை ஒரு வழியாக ரவிச்சந்திரன் அஸ்வின் பிரித்தார். அதில் 7 பவுண்டரியுடன் சற்று அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 32 (44) ரன்கள் எடுத்திருந்த போது பவுண்டரி அடிக்க ஆசையை தூண்டும் வகையில் பந்து வீசிய அஷ்வின் ரவீந்திர ஜடஜாவிடம் கேட்ச் கொடுக்க வைத்து இந்தியாவுக்கு முதல் விக்கெட்டை எடுத்து கொடுத்தார்.
அந்த நிலைமையில் களமிறங்கிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் தன்னுடைய தரத்தை காட்டும் வகையில் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருப்பினும் 23வது ஓவரை வீசிய முகமது ஷமி 137 கி.மீ வேகத்தில் அவரை எட்ஜ் கொடுக்க வைத்து 3 (20) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். முன்னதாக 3வது போட்டியில் வென்றதால் 4வது போட்டியிலும் நிச்சயமாக வெல்வோம் என்று இப்போட்டிக்கு முன்பாக சவால் விடுத்திருந்த அவரை முகமது ஷமி தனது அதிரடியான வேகத்தில் அவுட்டாக்கி செயலில் பதிலடி கொடுத்தார்.
ஆனாலும் மறுபுறம் மிகச் சிறப்பாக பேட்டிக் செய்து வரும் உஸ்மான் கவாஜா 47* (130) ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சவால் கொடுத்து வரும் நிலையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அவருடன் இணைந்து பேட்டிங் செய்து வருகிறார். அதனால் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் 100 ரன்களை கடந்துள்ள ஆஸ்திரேலியா இந்த போட்டியில் வெற்றி பெறும் எண்ணத்துடன் விளையாடி வருகிறது. முன்னதாக இந்த தொடரில் நாக்பூர், டெல்லி, இந்தூர் ஆகிய மைதானங்களில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளில் முதல் நாளிலேயே பந்து அதிகமாக சுழன்று சுழல் பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுத்தது.
#TEAMINDIA STRIKE!@ashwinravi99 draws first blood early in the match and gets the prized wicket of Travis Head. 🥳
Tune-in to LIVE action in the Mastercard #INDvAUS Test on Star Sports & Disney+Hotstar! #BelieveInBlue #TestByFire #Cricket pic.twitter.com/WHb55awZGs
— Star Sports (@StarSportsIndia) March 9, 2023
ஆனால் இந்த போட்டியில் முதல் நாளில் பெரிய அளவில் பந்து சுழலாமல் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தூரில் பிட்ச் மோசமாக இருந்ததாக ரேட்டிங் வழங்கி ஐசிசி 3 கருப்பு புள்ளிகளை தண்டனையாக அறிவித்தது. அதனால் அகமதாபாத் நகரில் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்குமாறு இந்திய அணி நிர்வாகம் கேட்டுக் கொள்ளாததால் தாங்கள் விரும்பும் பிட்ச் அமைத்துள்ளதாக அந்த மைதான பராமரிப்பாளர்கள் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: IND vs AUS : ஒவ்வொரு பந்துலயும் ரிவியூ எடுக்க சொல்லி டார்ச்சர் பண்றாரு, இந்திய வீரர் மீது அலுத்துக்கொள்ளும் கேப்டன் ரோஹித் சர்மா
அந்த வகையில் இந்திய அணியின் தலையீடு இல்லாத காரணத்தால் இந்த போட்டியில் நல்ல பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இப்போட்டி 5 நாட்கள் முழுதாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.