இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடயேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியானது கடந்த இரண்டாம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவு பெற்றுள்ளது. வருகிற 18ஆம் தேதி நியூசிலாந்து அணியானது இந்திய அணியுடன் உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதவிருப்பதால், இந்த தொடரில் நியூசிலாந்து அணி வீரர்களின் செயல்பாட்டை முன்னாள் வீரர்கள் பலரும் உற்று நோக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த முதல் போட்டியைக் கண்ட இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் இங்கிலாந்து அணி வீரர்களின் செயல்பாட்டை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
இந்த போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தின் மதிய உணவுக்குப் பிறகு தங்களது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்து கொண்ட நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணிக்கு 273 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. நியூசிலாந்து அணி டிக்ளேர் செய்தபோது அந்த நாளில் 75 ஓவர்கள் எஞ்சியிருந்தது. 75 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் கறமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள், வெற்றியைப் பற்றியெல்லாம் நினைக்காமல் ஆட்டத்தை ட்ராவை நோக்கி கொண்டு சென்றனர்.
இறுதியாக அந்த அணி 70 ஓவர்கள் விளையாடி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 170 ரன்களை அடித்தது. வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் அதனை செய்யாத இங்கிலாந்து அணி வீரர்களின் மேல் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில்தான் இங்கிலாந்து வீரர்களின் இந்த செயலை விமர்ச்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர். அந்த பதிவில்,
If you won’t even try to chase a target of 3.6 an over at home with no WTC points at stake, when will you ever try? Not a good advert for test cricket😴 #EngvNZ@ECB_cricket pic.twitter.com/K4qzAhoe7L
— Wasim Jaffer (@WasimJaffer14) June 6, 2021
உங்களுடைய சொந்த நாட்டு ஆடுகளங்களில் விளையாடும்போதுகூட நீங்கள் ஒரு ஓவருக்கு 3.6 என்ற ரன் ரேட்டில் இலக்கை சேஸ் செய்ய முயற்சிக்கவில்லை என்றால் பிறகு எங்குதான் சேஸ் செய்ய முயற்சிப்பீர்கள்? இந்த போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகளையும் பெற்றுத் தராது எனும்போதுகூட நீங்கள் அந்த இலக்கை சேஸ் செய்ய முயற்சிக்கவில்லை என்று கூறிய அவர், இதுபோன்ற செயல்பாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு நல்லதல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார்.
வாசிம் ஜாபரை போலவே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்னேவும் இங்கிலாந்து வீரர்களின் செயல்பாட்டை கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார். இது குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட், மைதானத்தில் பந்தானது மிகவும் மெதுவாக வந்ததால் பேட்டிங் ஆடுவதற்கு கடினமாக இருந்தது. எனவேதான் நாங்கள் அப்படி விளையாடினோம். எங்களுடைய இந்த செயல்பாடு நிறைய நபர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் எங்களுடைய கோணத்தில் இருந்து பார்த்தால் நாங்கள் செய்தது சரியென்றே தெரிகிறது என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வருகிற 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது.