ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இதைத் தொடர்ந்து அடுத்த ஐசிசி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஆம் வரும் 2025 பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினைகளால் பாகிஸ்தானுக்கு சென்று அந்த தொடரில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அத்துடன் தங்களுடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சொல்லப்போனால் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அங்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றியும் கண்டது.
ஜாம்பவானின் கோரிக்கை:
இந்நிலையில் 1996க்குப்பின் 28 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் முதல் முறையாக ஐசிசி தொடர் நடைபெற உள்ளது. எனவே தற்சமயத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ள தங்கள் கிரிக்கெட்டின் நன்மைக்காக அத்தொடரில் இந்தியா கண்டிப்பாக விளையாட வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தற்போது பாகிஸ்தானில் பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மைதானங்களில் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
எனவே அரசியலையும் கிரிக்கெட்டையும் ஒன்றாக்காமல் இந்தியா வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஐஏஎன்எஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானில் விளையாட இந்தியா வரும் என்று நம்புகிறேன். அனைத்து அணிகளையும் பிரம்மாண்டமாக வரவேற்க மொத்த நாடும் தயாராக உள்ளது. தற்போது வசதிகள் சிறப்பாக இருக்கிறது. புதிய மைதானங்கள் கட்டப்பட்டுள்ளது”
“வாரியத் தலைவர் மோசின் நக்வி லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி ஆகிய நகரங்களில் புதிய மைதானத்தை உருவாக்க துவங்கியுள்ளார். எனவே இது சிறப்பான தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்களுடைய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காகவும் உலக கிரிக்கெட்டின் நன்மைக்காகவும் பாகிஸ்தானுக்கு இந்த தொடர் தேவைப்படுகிறது. எனவே இத்தொடரில் அனைத்து அணிகளும் விளையாடும் என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க: நான்கை 5ஆக மாற்றியவர்.. இந்தியாவில் மிஸ்ஸானாலும் பாபர் அசாம் கிங் ஆஃப் பாகிஸ்தான்.. ஹசன் அலி பேட்டி
“கிரிக்கெட்டும் அரசியலும் தனித்தனியே இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். மொத்தத்தில் இந்த தொடருக்காக பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. அதை நடத்துவதற்காக மொத்த நாடும் ஆவலுடன் காத்திருக்கிறது. அணிகள், உயர் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அதை பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். அதே போல சாகித் அப்ரிடி போன்ற மேலும் சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.