உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. 1987, 2011 வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் கோப்பை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இருப்பினும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் நாக் அவுட் போட்டிகளில் கைவிடுவதும், ஜஸ்பிரித் பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விளையாடாமல் இருப்பதும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சாதாரண இரு தரப்பு தொடர்களில் மிரட்டலாக செயல்படும் இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் ஏதேனும் ஒரு வகையில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறி வருகிறது.
இந்தியாவுக்கு தான் அழுத்தம்:
அதனால் இம்முறை சொந்த மண்ணில் அந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது. அத்துடன் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவின் கால சூழ்நிலைகளையும் இந்திய வீரர்களின் பலம் பலவீனங்களையும் வெளிநாட்டு வீரர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். அதனால் சொந்த மண் சாதகம் வெறும் பெயருக்காக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்தியா வெல்லும் என்று சொல்லலாம்.
இந்நிலையில் இந்த தொடரில் இதர அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். குறிப்பாக 2011இல் சொந்த மண்ணில் வென்றிருந்தாலும் தற்போது 10 வருடங்களாக கோப்பையை வெல்லாததால் இரு மடங்கு அழுத்தம் இந்தியாவுக்கு இருக்கும் என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“நிச்சயமாக இந்தியாவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக மிகவும் கவரும் வகையில் கனவில் வீசுவது போல அசத்தும் முகமது ஷமி அவர்களுக்கு பலத்தை சேர்க்கிறார். ஆனால் பும்ரா ஃபிட்டாக இருப்பது அவசியமாகும். தற்போது ஃபிட்னஸ் அளவில் அவருடைய நிலைமை என்ன என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் குணமடைந்து விளையாடுவது இந்தியாவுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது போக அவர்களிடம் அஸ்வின், ஜடேஜா போன்ற நல்ல சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர்”
“அதில் யார் விளையாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்திய அணியில் நிறைய நல்ல வீரர்கள் இருக்கின்றனர். ஆனாலும் சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். 2011இல் இந்தியா வென்றது. ஆனால் அதன் காரணமாகவே அவர்களுக்கு மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் இருக்கும். பாகிஸ்தானுக்கும் அதே நிலைமை தான். ஒருவேளை சொந்த மண்ணில் விளையாடினாலும் பாகிஸ்தான் மீதும் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்” என்று கூறினார்.
முன்னதாக இந்த உலகக் கோப்பையில் 2023 ஆசிய கோப்பைக்கு பதிலடியாகவும் பாதுகாப்பு காரணங்களாலும் பாகிஸ்தான் விளையாடாது என்று அந்நாட்டு வாரியம் தெரிவிப்பதற்கு வாசிம் அகரம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க:டெஸ்ட்டை தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும் அரிதான சாதனையை நிகழ்த்திய – இந்திய வீரர்
“இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதாவது இந்தியாவில் ஒரு மைதானத்தில் ஒரு தேதியில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டால் நிச்சயமாக நான் விளையாடுவேன். அகமதாபாத் அல்லது சென்னை அல்லது கொல்கத்தா அல்லது மும்பை என எங்கிருந்தாலும் அது வீரர்களை பாதிக்கப் போவதில்லை. எனவே நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாட வேண்டும்” என்று கூறினார்.



