ரொம்ப வெய்ட்டா இருந்தாரு, சச்சினை 2011 ஃபைனலில் விராட் கோலி தூக்கியது ஏன்? கலகலப்பான பின்னணியை பகிர்ந்த சேவாக்

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. அதில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் கூட சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க போராட உள்ளது. முன்னதாக 2011 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையில் சச்சின் டெண்டுல்கர், வீரவேந்தர் சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான் சீனியர்கள் மற்றும் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற இளம் வீரர்களுடன் ஆரம்பம் முதலே சொல்லி அடித்த இந்தியா லீக் மற்றும் நாக் அவுட் சுற்று ஃபைனலுக்கு முன்னேறியது.

worldcup

- Advertisement -

அதை தொடர்ந்து மும்பையில் இருக்கும் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்களை துரத்தும் போது சச்சின், சேவாக் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஏமாற்றிய நிலையில் விராட் கோலியும் போராடி ஆட்டமிழந்தார். அதனால் தடுமாற்றம் ஏற்பட்டாலும் நங்கூரமாக நின்று விளையாடிய கௌதம் கம்பீர் 97 ரன்களும் இப்போது நினைத்தாலும் புல்லரிப்பை ஏற்படுத்தக்கூடிய சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்த தோனி 91* ரன்கள் எடுத்து 28 வருடங்கள் கழித்து கோப்பையை முத்தமிட்டு சரித்திரம் படைக்க உதவினர்.

வெய்ட்டான சச்சின்:
அப்படி போராடி பல வருடங்கள் காத்திருந்து பெற்ற வெற்றியால் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த அப்போட்டியின் முடிவில் முடியாமல் அழுததை ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியாது. அதை விட சுரேஷ் ரெய்னா போன்ற இளம் வீரர்கள் சச்சினை தங்களுடைய தோள் மீது சுமந்து அவருடைய வான்கடே மைதானத்தை சுற்றி வலம் வர வைத்து மரியாதை கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது.

Sachin

குறிப்பாக 16 வயது பிஞ்சு கால்களுடன் அறிமுகமாகி 24 வருடங்கள் உலக அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து 30000க்கும் மேற்பட்ட ரன்களையும் 100 சதங்களையும் அடித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்திய பேட்டிங் துறையை தனது தோள் மீது சுமந்த சச்சினை தங்களது தோளில் சுமப்பது கடமை என்று அந்த சமயத்தில் விராட் கோலி தெரிவித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் அந்த போட்டியில் சச்சின் சற்று கனமாக இருந்த காரணத்தால் தோளில் காயத்துடன் வயதாகியிருந்த தம்மால் தூக்க முடியவில்லை என அவருடன் தொடக்க வீரராக விளையாடிய விரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.

- Advertisement -

அதே போல எம்எஸ் தோனி முழங்கால் காயத்துடன் அவதிப்பட்டதால் நீங்கள் சச்சினை தூக்கி மரியாதை செய்யுமாறு விராட் கோலியிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி 2023 உலகக் கோப்பை அட்டவணை வெளியீட்டு விழாவில் பேசியது பின்வருமாறு. “அந்த சமயத்தில் சச்சின் மிகவும் கனமாக இருந்ததால் அவரைத் தூக்க முடியாது என்று கருதிய நாங்கள் அந்த வாய்ப்பை மறுத்து விட்டோம். ஏனெனில் வயதானவர்களாக இருந்த என்னை போன்றவர்களுக்கு தோள்பட்டையில் பிரச்சனை இருந்தது”

Sachin Sehwag

“மேலும் எம்எஸ் தோனி முழங்கால் பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தார். அதன் காரணமாக பாரமான சச்சினை சுமக்கும் பொறுப்பை நாங்கள் இளம் வீரர்களிடம் ஒப்படைத்தோம். குறிப்பாக நீங்கள் சென்று சச்சினை தூக்கி மைதானத்தைச் சுற்றி மரியாதை செலுத்துங்கள் என்று சொன்னோம். அதனாலேயே அன்றைய நாளில் விராட் கோலி அவரை சுமந்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:TNPL 2023 : ஜோடி போட்டு அடித்த திண்டுக்கல் ஜோடி, பேட்டிங்கில் அசத்தியும் திருப்பூர் வீழ்ந்தது எப்படி?

இருப்பினும் அந்த தருணம் கடந்த காலத்தில் இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக செயல்பட்ட சச்சினை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விராட் கோலி சுமந்தது எதிர்காலத்தை அப்போதே காட்டும் வகையில் அமைந்தது என்றே சொல்லலாம். அந்த வகையில் 1992 – 2007 வரை தொட முடியாத உலகக் கோப்பையை தம்முடைய சொந்த மண்ணில் கடைசி முயற்சியில் வென்ற சச்சினும் உழைப்பின் பரிசாக சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement