சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் கடுமையாக உழைத்து எதிரணி கொடுக்கும் சவால்களை தகர்த்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் போது உழைப்பின் பயனாக கிடைக்கும் வெற்றியை களத்திலேயே மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். அதிலும் குறிப்பாக பேட்ஸ்மேன்கள் தங்களுடைய லட்சியமான சதத்தை அடிக்கும்போது ஹெல்மெட்டை கழற்றி பேட்டை உயர்த்தி கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும். அதில் காதையும் கண்ணையும் மூடிக்கொள்ளும் கேஎல் ராகுல் போல சில பேட்ஸ்மேன்கள் தங்களுடைய சதத்தை கொண்டாடுவதில் தங்களுக்கென்று வித்தியாசமான ஸ்டைலை வைத்திருப்பார்கள். அதை வெறும் ஸ்டைல் என்று சொல்வதை விட அந்த கொண்டாட்டத்திற்கு பின்பு கடினமான உழைப்பும் சோதனைகளை கடந்த கதையும் இருக்கும்.
அந்த வகையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கடந்த 10 வருடங்களாக ஜாம்பவான் சச்சினுக்கு பின் அவரைப் போலவே ரன் மெஷினாக எதிரணிகளை பந்தாடி வரும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டின் லேட்டஸ்ட் செஞ்சுரி நாயகனாக போற்றப்படுகிறார். பொதுவாகவே சாதாரண விக்கெட் விழுந்தால் கூட அதை வெறித்தனமாக கொண்டாடித் தீர்க்கும் அவர் சதமடிக்கும் போது முழுமையான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி காற்றில் பாயும் சூப்பர்மேனாக கொண்டாடி தீர்ப்பார். அதில் பேட்டில் முத்தமிட்டு எதிரணிகளுக்கு பதிலடி கொடுப்பது, தன்னுடைய பெயரை எதிரணிக்கு சொல்லும் வகையில் ஜெர்ஸியின் பின்புறம் சைகை செய்வது போன்ற கொண்டாட்டங்களும் அடங்கும்.
3 அமைதியான கொண்டாட்டங்கள்:
அந்த வகையில் பொதுவாகவே வெறித்தனமாக கொண்டாடித் தீர்க்கும் சதங்களுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக மகிழ்ச்சியாக கொண்டாடிய 3 வித்தியாச சதத்தை பற்றி பார்ப்போம்:
1.புயலுக்கு பின் அமைதி: 2008 முதல் அசால்ட்டாக சதமடித்த விராட் கோலி 2019இல் வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா பங்கேற்ற வரலாற்றின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் 136 ரன்கள் குவித்து சதமடித்தார். அப்போது வழக்கத்திற்கு மாறாக வெறித்தனமாக கொண்டாடாமல் அமைதியாக அந்த சதத்தை கொண்டாடிய அவர் பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
அன்றைய நாளில் 70வது சதத்தை விளாசி அதுவரை புயலாய் விளையாடிய அவர் மிகப்பெரிய அமைதியை சந்தித்தது போல் அதன்பின் 71வது சதத்தை அடிப்பதற்கு 1020 நாட்கள் தேவைப்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
2. மாபெரும் சதம்: கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் நம்பிக்கை நட்சத்திரமாக சக்கை போடு போட்ட அவர் 31 வயதிலேயே 70 சதங்களை விளாசியதால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனை அசால்டாக உடைப்பார் என்று அனைவரும் கருதினர். ஆனால் 2019க்குப்பின் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டு 3 வருடங்களாக சதமடிக்காமல் தவித்த அவரை அணியிலிருந்து கோரிக்கை வைக்கும் அளவுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இருப்பினும் எதற்கும் காது கொடுக்காமல் வழக்கம்போல கடினமான பயிற்சிகளை எடுத்து விடா முயற்சி செய்து வந்த அவர் 2022 ஆசிய கோப்பையில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்களைக் குவித்த இந்திய பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அடம் பிடித்து வந்த 71ஆவது சதத்தை விளாசினார். அப்போது 3 வருடங்களாக சந்தித்த விமர்சனங்களுக்கு பதிலடியாக இருமடங்கு ஆக்ரோசத்துடன் வெறித்தனமாக சதத்தை கொண்டாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படியே நேர்மாறாக அவ்வளவு மகிழ்ச்சியை பார்த்திருக்கவே மாட்டோம் என்ற அளவுக்கு அமைதியாக சிரித்த முகத்துடன் கொண்டாடிய அவர் தனது மனைவி அனுஷ்காவின் மோதிரத்தை முத்தமிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தார்.
3. முதல் இரட்டை சதம்: சதத்தை விட இரட்டை சதத்தை அடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்களை அடித்த இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் கடந்த 2016இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் முதல்முறையாக இரட்டை சதமடித்து 200 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க : அந்த விஷயத்தில் என்னையே விராட் கோலி மிஞ்சிட்டாரு – சௌரவ் கங்குலி வெளிப்படையான பாராட்டு
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டில் இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்த அவரை மைதானத்தில் இருந்த ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் கைதட்டி பாராட்டினார். அந்த அளவுக்கு தரமான அந்த சதத்தை வெறித்தனமாக கொண்டாடாத அவர் வழக்கம்போல ஹெல்மெட்டை கழற்றி வழக்கத்திற்கு மாறாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணை முத்தமிட்டு கொண்டாடினார்.