இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான விராட் கோலி கடந்த 2010 ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய டி20 அணியில் அறிமுகமானார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது கரியரை துவங்கிய விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 125 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம் மற்றும் 38 அரைசதம் என 4,188 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் ஏகப்பட்ட சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது ஏன்? : விராட் கோலி
மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வந்த விராத் கோலி கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில் 59 பந்துகளை சந்தித்து 76 ரன்கள் அடித்த அவரே இந்திய அணியின் வெற்றிக்கும் உதவியதால் அவருக்கு அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
பின்னர் போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தார். தற்போது இந்த உலகக் கோப்பை தொடரினை வென்று ஒரு ஆண்டு கடந்த நிலையில் தான் ஏன் டி20 உலக கோப்பையை வென்ற கையோடு ஓய்வை அறிவித்தேன் என்று கோலி கொடுத்த விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தனது ஓய்வு முடிவு குறித்து பேசியிருந்த விராட் கோலி கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றியுடன் ஓய்வு பெறுவது மிகவும் மகிழ்ச்சி. டி20 போட்டிகளில் இருந்து நான் ஓய்வுபெற இதுவே சிறந்த தருணம் என்று கருதுகிறேன். ஏனெனில் அடுத்து வரும் இளம் வீரர்கள் தயாராக வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறுவதால் அதற்காக இளம் வீரர்கள் தயாராக வேண்டும் என்பதற்காகவே ஓய்வு முடிவை அறிவித்தேன் என விராட் கோலி கூறியிருந்தார். இப்படி இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டும் இளம் வீரர்களுக்கான வாய்ப்பினை கருத்தில் கொண்டுமே விராட் கோலி ஓய்வினை அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க : இந்த இங்கிலாந்து தொடர் முழுவதும் கே.எல் ராகுல் அதனை செய்வார் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து
கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் கடந்த மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். இப்படி இரண்டு வகையான ஃபார்மெட்டில் இருந்தும் விராட் கோலி ஓய்வு பெற்றாலும் 2027 வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார் என்று நம்பலாம்.



