ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐசிசி 2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் பெற்றுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் அயர்லாந்தை எளிதாக தோற்கடித்த இந்தியா தொடரை வெற்றியுடன் துவங்கியது. ஆனால் 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் பாகிஸ்தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் பந்து வீச்சில் அனலாக செயல்பட்ட இந்திய பவுலர்கள் பாகிஸ்தானை 20 ஓவரில் 113/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். அதனால் டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டான போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்று இந்தியா அபார சாதனையும் படைத்தது. முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
எச்சரிக்கும் புள்ளிவிவரம்:
பொதுவாகவே 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக விளையாடும் ஸ்டைலை கொண்ட அவர் பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதுமே சிம்ம சொப்பனமாக செயல்படக்கூடியவர். இருப்பினும் இம்முறை அவரை கேப்டன் ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறக்கிள்ளார். ஆனால் இதற்கு முன் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி முறையே 78*, 36*, 55*, 57, 82* ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
இருப்பினும் இம்முறை துவக்க வீரராக களமிறங்கிய அவர் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலகக் கோப்பை ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானார். அதை விட டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 3வது இடத்தில் விராட் கோலி மொத்தம் 24 இன்னிங்சில் விளையாடியுள்ளார். அந்த 24 இன்னிங்ஸில் அவர் வெறும் 1 முறை மட்டுமே ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகியுள்ளார். ஆனால் 3வது இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் அவர் 3 முறை களமிறங்கியுள்ளார்.
ஆச்சரியப்படும் வகையில் அந்த 3 இன்னிங்ஸிலும் அவர் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகியுள்ளார். அப்படி தனது கேரியரில் பெரும்பாலும் 3வது இடத்தில் களமிறங்கியே டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக அவர் உலக சாதனை படைத்துள்ளார். 2022இல் பாகிஸ்தானுக்கு எதிராக 82* ரன்கள் அடித்து அற்புதமான வெற்றியும் பெற்றுக் கொடுத்தார்.
இதையும் படிங்க: அஸ்வினை முந்திய ஜஸ்ப்ரித் பும்ரா.. ஐசிசி தொடரில் வேறு எந்த இந்திய பவுலரும் 2 வரலாற்று சாதனை
அது போக இந்த உலகக்கோப்பை நடைபெறும் மைதானங்கள் பேட்டிங்க்கு சவாலாக இருக்கிறது. எனவே விராட் கோலி போன்ற அனுபவமிக்கவர் 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக விளையாடுவதே தற்சமயத்தில் இந்திய அணிக்கு தேவைப்படுகிறது. அதனாலயே முதலிரண்டு போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங்கில் சரிவும் ஏற்பட்டது. எனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன் 3வது இடத்தில் விராட் கோலியை களமிறக்காவிட்டால் ஆபத்து இந்திய அணிக்கே என்பதை ரோகித் சர்மா உணர வேண்டும்.