6 விக்கெட்களை எடுத்தும்.. முகமது சிராஜை சிரித்து கிண்டலடித்த விராட் கோலி.. ஆசிய கோப்பை ஃபைனலில் ருசிகரம்

Mohammed Siraj Virat Kohli
- Advertisement -

ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஆசிய கோப்பை 2023 தொடரின் சாம்பியன் பட்டத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வென்று புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. குறிப்பாக நடப்பு சாம்பியன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்று பாகிஸ்தான் போன்ற இதர அணிகளால் எளிதில் தொட முடியாத அளவுக்கு வெற்றிகரமான ஆசிய அணியாக சரித்திரம் படைத்துள்ளது.

கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை முகமது சிராஜ் வீசிய அதிரடியான ஸ்விங் பந்துகளை கணிக்க முடியாமல் வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனை படைத்தது. மறுபுறம் 51 ரன்களை 6.1 ஓவரிலேயே சேசிங் செய்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு தொடரின் ஃபைனலில் அதிக பந்துகளை மீதம் (263) வைத்து வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனை படைத்தது.

- Advertisement -

சிரித்த விராட் கோலி:
முன்னதாக இப்போட்டியில் 4வது ஓவரை வீசிய முகமது சிராஜ் முதல் பந்தில் நிசங்காவை அவுட்டாக்கி 3, 4 ஆகிய பந்துகளில் முறையே சமரவிக்ரமா மற்றும் அசலங்கா ஆகியோரையும் அவுட்டாக்கினார். அதனால் ஹாட்ரிக் எடுப்பதற்கு வாய்ப்பை பெற்ற அவர் 5வது பந்தை சிறப்பாக வீசியும் டீ சில்வா பவுண்டரி அடித்தார். இருப்பினும் அதை பவுண்டரிக்கு விடக்கூடாது என்ற நோக்கத்தில் வேகமாக ஓடி துரத்திய முகமது சிராஜ் முடிந்தளவுக்கு போராடியும் தடுக்க முடியவில்லை.

குறிப்பாக அது பவர் பிளே என்பதால் பெரும்பாலான ஃபீல்டர்கள் உள்வட்டத்திற்குள் இருந்த நிலையில் தாமே சென்று பந்தை நிறுத்துவதற்கு சிராஜ் முயற்சித்தும் வெற்றி காண முடியவில்லை. ஆனால் அதை ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த விராட் கோலி மற்றும் சுப்மன் கில் (வீடியோவில் 2வது நிமிடத்தில்) ஆகியோர் வாய் மீது கை வைத்து சிரித்தார்கள். குறிப்பாக ஏற்கனவே 8/4 என இலங்கை சரிந்தும் அந்த பவுண்டரி போனால் போகட்டும் என்று விடாமல் வெறித்தனமாக சிராஜ் துரத்தியதை நினைத்து விராட் கோலி வெளிப்படையாகவே சிரித்தார்.

இருப்பினும் தம்முடைய ஓவரில் ஒரு ரன் கூட எக்ஸ்ட்ரா கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் வேகமாக துரத்திய சிராஜ் நிறைய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் பெற்றார். அத்துடன் அடுத்த பந்திலேயே டீ சில்வாவை அவுட்டாக்கிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் சரித்திரம் படைத்து அதிவேகமாக 5 விக்கெட்டுகள் (16 பந்துகளில்) எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement