அவரு விளையாடும்போது ஆவ்ன்னு பாத்துகிட்டே இருந்தேன். அவ்ளோ சூப்பரா ஆடுறாரு – விராட் கோலி புகழாரம்

Kohli Press
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியானது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. அதோடு மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 186 ரன்கள் குவிக்க அடுத்ததாக 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பெரிய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

India

- Advertisement -

அதன்படி சேசிங்கை துவங்கியதும் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 104 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களது இந்த பிரமாதமான ஆட்டமே இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக 36 பந்துகளை சந்தித்த சூரியகுமார் யாதவ் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 69 ரன்கள் குவித்தார். அதே வேளையில் விராட் கோலி நிதானமாக விளையாடினாலும் 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் இந்த வெற்றி குறித்து பேசிய விராட் கோலி பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வது மிகச் சிறப்பாக உள்ளது. என்னுடைய அனுபவத்தையும், என்னுடைய திறனையும் வைத்து தற்போது விளையாடி வருகிறேன். என்னுடைய இந்த ஆட்டம் தான் அணி நிர்வாகத்திற்கு தேவை. அந்த வகையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்தினேன்.

Virat Kohli Suryakumar Yadav

இந்த ஆட்டத்தில் எனக்கு நல்ல துவக்கம் கிடைத்ததும் ஜாம்பாவை அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் அவருக்கு எதிராக மிடில் ஓவர்களில் ரன்கள் வந்தே ஆக வேண்டும். அதன் காரணமாகவே அவரது ஓவரை டார்கெட் செய்து அடித்தேன். அதன் பின்னர் சூரியகுமார் யாதவ் மிகவும் அதிரடியாக விளையாட ஆரம்பித்து விட்டார். ஒரு கட்டத்தில் அவர் ஆடியதை பார்த்ததும் ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் என்னிடம் :

- Advertisement -

இறுதிவரை நீங்கள் பேட்டிங் செய்யுங்கள். மற்றபடி சூரியகுமார் யாதவ் அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார் அவர் ஆடட்டும் என்று கூறினர். அதனால் சூரியகுமார் யாதவுடன் சேர்ந்து பாட்னர்ஷிப் அமைத்தேன். இந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதன்முறையாக ஜஸ்ப்ரீத் பும்ரா படைத்த மோசமான சாதனை – விவரம் இதோ

இங்கிலாந்தில் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த அவர் ஆசிய கோப்பையிலும் பிரமாதமாக ஆடினார். அதனை தொடர்ந்து இந்த போட்டியில் அவர் ஆடிய ஒவ்வொரு ஷாட்டையும் எதிரில் நின்று நான் ரசித்தபடி ஆவ்ன்னு பார்த்துக் கொண்டே இருந்தேன். கடந்த ஆறு மாதங்களாக அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரிடம் நல்ல டைமிங் மற்றும் நல்ல திறன் ஆகியவை உள்ளது என்று மனதார கோலி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement