காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152, ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 4, சுப்மன் கில் 3 ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் அவுட்டானார்கள். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 3 ரன்களில் ஹேசல்வுட்டிடம் தனது கேரியரில் 11வது முறையாக அவுட்டானார். குறிப்பாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் என்ற பழைய பஞ்சாங்க திட்டத்தில் விராட் கோலியை அவர் எளிதாக வீழ்த்தியது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.
அதே சொதப்பல்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள விராட் கோலி கடந்த பல வருடங்களாகவே தமக்கு மிகவும் பிடித்த கவர் டிரைவ் அடிப்பதற்காக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை வம்படியாக சென்று அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அந்த ஆசையை பயன்படுத்தி துல்லியமாக பந்து வீசும் எதிரணி பவுலர்கள் அவரை தொடர்ந்து அவுட்டாக்கி வருகிறார்கள்.
அதே போலவே இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் (பெர்த் 2வது இன்னிங்ஸ் தவிர்த்து) அவுட்டான விராட் கோலி ஏமாற்றத்தை சந்தித்தார். எனவே இதே போன்ற சூழ்நிலையில் 2004 சிட்னி போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அவுட் சைட் ஆஃப் பந்துகளை தொடாமல் கவர் ட்ரைவ் அடிக்காமலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 241* ரன்கள் குவித்தார். அந்த யுத்தியை விராட் கோலியும் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுறுத்தினார்.
கேட்காத கிங்:
மறுபுறம் நன்கு செட்டிலாகி 30 ரன்கள் அடிக்கும் வரையாவது இப்போட்டியில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை அடிக்காதீர்கள் என்று விராட் கோலிக்கு மற்றொரு ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஆலோசனை கூறினார். ஆனால் அதையெல்லாம் கேட்காத விராட் கோலி மீண்டும் அப்படியே அவுட்டாகியுள்ளார். இத்தனைக்கும் 1 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடர் சமனில் இருக்கும் நிலையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இந்தப் போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது.
இதையும் படிங்க: சாரிப்பா மன்னிச்சுடு.. போராட்டம் நடத்திய படிதார்.. நேரலையில் மன்னிப்பு கேட்டு தீர்ப்பை மாற்றிய அம்பயர்
அப்படியிருந்தும் இப்படி அவுட்டானது திமிர்தனத்தின் உச்சமா? அல்லது கிங் என்ற கர்வமா? அல்லது அதீத தன்னம்பிக்கையா? என்று விராட் கோலியை கேட்க வைக்கிறது. அதே போல நீங்கள் சச்சினை விட பெரியவரா? என்று ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வினவுகிறார்கள். மொத்தத்தில் தொடர்ந்து சொதப்பும் விராட் கோலி 2011க்குப்பின் தமது கேரியரில் 2வது முறையாக ஒரு வருடத்தில் 14 முறை (2024ஆம் ஆண்டில்) ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி மோசமான சாதனையும் படைத்துள்ளார். இந்தியா 48-4 என திணறி வருகிறது.



