ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக மார்ச் 9ஆம் தேதி துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வலுவான நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்ற முதல் கிரிக்கெட் அணி என்ற மாபெரும் உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.
அந்த போட்டியில் 252 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார். அப்படியே ஸ்ரேயாஸ் ஐயர் 48, கில் 31, அக்சர் 29, ராகுல் 34 ரன்கள் அடித்து 49 ஓவரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் தோல்வியிலிருந்து மீண்டெழுந்து இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கம்பேக் கொடுத்துட்டோம்:
மேலும் தரமான இளம் வீரர்களால் இந்திய அணியின் வருங்காலம் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தம்முடைய நண்பன் கேன் வில்லியம்சன் தோற்றது பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு. “இது அற்புதமானது. கடினமான ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு பின் நாங்கள் மீண்டும் வர விரும்பினோம்”
“எங்களிடம் அற்புதமான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்திய கிரிக்கெட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார்கள். நீண்ட காலமாக விளையாடியதால் என்னை போன்றவர்கள் அழுத்தத்திற்குள் விளையாடுவதற்கு பார்ப்போம். இது போன்ற பெரிய கோப்பையை வெல்ல மொத்த அணியும் வித்தியாசமான வழிகளில் அசத்தியது”
வருங்காலம் நல்லாருக்கு:
“எங்களது வீரர்கள் மிகவும் தாக்கம் நிறைந்த பேட்டிங் மற்றும் பவுலிங் செய்தனர். எனவே இந்த கோப்பையை நாங்கள் அணியாக சேர்ந்து முயற்சித்து வென்றுள்ளோம். எங்கள் இளம் வீரர்களிடம் எனது அனுபவத்தையும் எப்படி நீண்ட காலம் விளையாடினேன் என்பதையும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். நீங்கள் கிளம்பும் போது அணி சிறந்தவர்கள் கையில் இருப்பதை விட்டுச் செல்ல விரும்புவீர்கள்”
இதையும் படிங்க: இந்தியாவுக்காக இயற்கையா வராததை செஞ்சேன்.. சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் ஆட்டநாயகன் ரோஹித் பேட்டி
“அந்த வகையில் கில், ஸ்ரேயாஸ், ராகுல் ஆகியோர் தாக்கம் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். எனவே இந்திய அணி நல்ல கைகளில் இருக்கிறது. எப்படி குறைவான வீரர்களை வைத்துக்கொண்டு நியூசிலாந்து அசத்துகிறது என்று நாங்கள் எப்போதுமே ஆச்சரியப்படுவோம். எப்போதும் நல்ல திட்டத்துடன் வரக்கூடிய அவர்களிடம் திறன் இருக்கிறது. அவர்கள் சிறந்த ஃபீல்டிங் அணி. அவர்களுக்காக பாராட்டுக்களைக் கொடுக்கிறேன். எனது நல்ல நண்பன் (கேன்) தோல்வியை சந்தித்த பக்கம் இருப்பதைப் பார்ப்பது சோகத்தை கொடுக்கிறது. ஆனால் நானும் சமீப காலங்களில் அதே பக்கத்தில் இருந்தேன். எனவே எங்களுக்கு இடையே அன்பு மட்டுமே இருக்கும்” என்று கூறினார்.



