உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான வரவேற்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்பட்ட நிலையில் போட்டி தற்போது துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை குவித்தது .அதிகபட்சமாக துவக்க வீரர் ரோகித் சர்மா 140 ரன்களை கோலி 77 ரன்கள் குவித்தனர். இந்த போட்டியில் கோலி 57 ரன்கள் எடுத்தபோது சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை ஒன்றை முறியடித்தார். அதாவது வேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ள சச்சின் சாதனையை தற்போது கோலி முறியடித்துள்ளார்.
சச்சின் 11 ஆயிரம் ரன்களை கடக்க 272 போட்டிகளை எடுத்துக் கொண்டார். ஆனால் கோலி அதனை 50 போட்டிகள் முன்னதாக 222 போட்டிகளிலேயே முறியடித்து புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பாகிஸ்தான் அணி களம் இறங்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.