ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 9 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்து முக்கிய பங்காற்றினார். 2021ஆம் ஆண்டு அறிமுகமாகி சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்ட அவர் தொடர்ந்து போராடி 3 வருடங்கள் கழித்து டி20 அணியில் கம்பேக் கொடுத்தார்.
அந்த வாய்ப்பில் அபாரமாக பௌலிங் செய்து அடுத்தடுத்த வெற்றிகளில் பங்காற்றிய அவருக்கு கடைசி நேரத்தில் சாம்பியன்ஸ் ட்ராபியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக பௌலிங் செய்த வருண் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
டெஸ்ட் வாய்ப்பு:
குறிப்பாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் வருண் போன்ற மிஸ்ட்ரி ஸ்பின்னர் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து கேட்டுக்கொண்டார். இந்நிலையில் மித வேகத்தில் வீசுவதால் தமது பவுலிங் பொறுமையான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு செட்டாகாது என்று வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இது பற்றி கோபிநாத் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.
“டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஆர்வம் எனக்கும் இருக்கிறது. ஆனால் எனது பௌலிங் ஸ்டைல் அதற்கு பொருத்தமாக இருக்காது. எனது பவுலிங் கிட்டத்தட்ட மிதவேகம் போல இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் தொடர்ச்சியாக 20 முதல் 30 ஓவர்கள் வீச வேண்டும். அதை எனது பௌலிங் வைத்து என்னால் வீச முடியாது”
வருண் வெளிப்படை:
“நான் வேகமாக வீசுவதால் 10 – 15 ஓவர்களை மட்டுமே பவுலிங் செய்ய முடியும். அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருத்தமாக இருக்காது. எனவே தற்போதைய நிலையில் நான் 20 மற்றும் 50 ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்திக்கிறேன். வேகப்பந்து வீச்சாளராக கேரியரை துவங்கினாலும் அதைத் தொடர முடியாததற்காக நான் வருத்தப்படவில்லை. இங்கே நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க: சச்சினால் கூட முடியாது.. கோலிக்கு இந்தியா செஞ்ச சப்போர்ட்டை பாருங்க.. பாபர் அசாம் ட்ராப் பற்றி சயீத் அஜ்மல்
“தமிழ்நாட்டில் பந்து ஸ்விங் ஆகாது. அங்கே சுழலுக்கு சாதகமான மைதானங்களே இருக்கும். அதனாலேயே தமிழ்நாட்டில் அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. தமிழ்நாட்டில் அது போன்ற பவுலர்கள் வருவது அரிது. பாலாஜி, நடராஜன் மட்டுமே உள்ளனர். வெளிமாநிலங்களில் நிறைய பேர் உள்ளனர். அஸ்வின் வேகப்பந்து வீச்சை விட்டு விட்டு ஸ்பின்னராக வந்தார். நானும் அந்த வழியில் இருப்பது மகிழ்ச்சி” என்று கூறினார்.