ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. அந்த வெற்றிக்கு 14 வயதாகும் இளம் வீரர் வைபவ் சூரியவன்சி 7 பவுண்டரி 11 சிக்சருடன் 101 (38) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினர். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதத்தை அடித்து வீரராகவும் அவர் உலக சாதனை படைத்தார்.
முன்னதாக இந்த வருடம் அறிமுகமான அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய விளையாடியுள்ளதால் முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பது தமக்கு சாதாரணமென்று சூரியவன்சி கூறியுள்ளார். மேலும் 14 கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு தன்னுடைய பெற்றோர்களின் கடின உழைப்பே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெற்றோர்களே காரணம்:
அத்துடன் இந்தியாவுக்காக விளையாடும் வரை ஓயமாட்டேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக அண்டர் 19 உலகக் கோப்பை மற்றும் உள்ளூரில் முதல் பந்திலேயே நிறைய முறை சிக்சர் அடித்துள்ளேன். எனவே அது எனக்கு சாதாரணம். முதல் 10 பந்துகள் வரை எனக்கு எந்த அழுத்தமும் இருக்காது. பந்து எனது இடத்தில் இருந்தால் எதைப் பற்றியும் யோசிக்காமல் அடிப்பேன்”
“எனது அறிமுகப் போட்டியில் அது முதல் போட்டி என்றெல்லாம் நினைக்கவில்லை. எதிரே சர்வதேச பவுலர் இருந்தார். அதைப்பற்றி நான் எதையும் பொருட்படுத்தாமல் போட்டியில் கவனம் செலுத்தினேன். என்னுடைய பெற்றோர்கள் காரணத்தாலேயே இன்று நான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னுடைய பயிற்சிக்காக எனது அம்மா அதிகாலை 3 மணிக்கு எழுந்து விடுவார்”
இந்திய கனவு:
“பின்னர் வேலைகளை பார்த்து விட்டு இரவு 11 மணிக்கு தூங்கச் செல்லும் அவர் 3 மணி நேரம் மட்டுமே தூங்குவார். பின்னர் எனக்காக சாப்பாடு செய்வார். எனது அப்பா எனக்காக வேலையை விட்டார். அதனால் எனது வீட்டை என்னுடைய பெரிய சகோதரர் கடினமான முயற்சிகளை எடுத்து நடத்தினர். அப்போதும் என்னுடைய அப்பா எனக்கு ஆதரவு கொடுத்தார்”
இதையும் படிங்க: 14 வயதில் உங்க கனவு என்ன? சூர்யவன்சி சதத்தை துச்சமாக பேசிய கில்லை.. விளாசிய அஜய் ஜடேஜா
“கடினமாக உழைப்பவர்களை கடவுள் எப்போதும் கைவிடுவதில்லை. அந்த வகையில் இன்று நான் சாதித்துள்ள விஷயங்கள் என்னுடைய பெற்றோர்களால் கிடைத்தது. அடுத்ததாக இந்திய அணிக்காக பங்காற்ற நான் விரும்புகிறேன். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். அந்த உயரத்தை எட்டும் வரை நான் எதையும் நிறுத்த மாட்டேன். நாட்டுக்காக சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்” என்று கூறினார். மேலும் ராஜஸ்தான் அணியில் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட் உட்பட அனைத்து பயிற்சியாளர்களும் தமக்கு உதவி செய்ததாகவும் சூரியவன்சி தெரிவித்துள்ளார்.



