இந்தியா மேல புகாரே சொல்ல முடியாது.. 3 அதிர்ஷ்டம் கிடைச்சுது.. இனியாவது முன்னேறுங்க.. இங்கிலாந்துக்கு நாசர் அட்வைஸ்

Nasser Hussain
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் பஸ்பால் அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்துவோம் என்று சொன்னதை இங்கிலாந்து செய்து காட்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் அதற்கடுத்த 4 போட்டிகளில் சுதாரித்து விளையாடி வெற்றி கண்ட இந்தியா 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் 2012க்குப்பின் தோல்வியை சந்திக்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்ட இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியது.

- Advertisement -

புகார் இல்ல:
மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் சொதப்பலாக பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த தொடரில் இந்தியா மீது எந்த புகாரும் தெரிவிக்க முடியாத அளவுக்கு பிட்ச் இரு அணிகளுக்கும் சமமாகவும் தரமாகவும் இருந்ததாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மேலும் 5 போட்டிகளில் 3 முறை டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாத இங்கிலாந்து இனிமேலாவது சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடுவதை கற்றுக் கொள்ள வேண்டும் என நாசர் ஹுசைன் கூறியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த சுற்றுப்பயணத்தில் பேட்டிங் சரிவு தான் இங்கிலாந்தின் முக்கிய பிரச்சினையாக இருந்தது. பலமுறை அவர்கள் நல்ல துவக்கத்தைப் பெற்றும் மிடில் ஆர்டரில் சரிவை சந்தித்தனர்”

- Advertisement -

“இந்தியாவில் இப்படி நடக்கும். ஆனால் இந்த தொடரின் பிட்ச்கள் அபாரமாக இருந்தது. எனவே இங்கிலாந்து அதைப்பற்றி எந்த புகார் சொல்ல முடியாது. மேலும் 5 போட்டிகளில் அவர்கள் 3 முறை டாஸ் வென்றனர். எனவே ஏன் உங்களுடைய பேட்டிங் சரிந்தது? என்பதை கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏன் ஜாக் கிராவ்லி தொடர்ந்து நல்ல துவக்கத்தை பெற்றும் பின்னர் அவுட்டானார்? என்பதை யோசியுங்கள்”

இதையும் படிங்க: பேசாம ரிட்டையர் ஆகிடுங்க.. வம்பிழுத்த பேர்ஸ்டோ.. ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை எடுத்த கில்

“அதே போல பந்து புதிதாகவும் சுழலும் போதும் ஒரு பவுலரை பென் டக்கெட் கண்டிப்பாக அதிரடியாக எதிர்கொள்ள வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். ஓலி போப் அபாரமான 196 ரன்கள் அடித்த பின் எதுவுமே செய்யவில்லை. எனவே உங்களுடைய இந்த ஆட்டத்தை பார்த்து அதில் முன்னேறும் வழியை பாருங்கள். அந்த வகையில் தான் ஒரு வீரராகவும் அணியாகவும் உங்களால் முன்னேற முடியும்” என்று கூறினார்.

Advertisement