ஐபிஎல் வரலாற்றில் சதத்தை 1 ரன்னில் தவறவிட்டு 99 ரன்களில் அவுட்டான டாப் 5 வீரர்களின் – லிஸ்ட் இதோ

Kishan-2
- Advertisement -

ஐபிஎல் தொடர் என்பது பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு ரன் மழை பொழியும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு கிரிக்கெட் தொடராக கருதப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு இன்னிங்சிலும் விளையாடும் பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்க வேண்டும் என்ற களமிறங்கினாலும் கூட ஐபிஎல் உட்பட டி20 கிரிக்கெட்டில் அரைசதம் அடிப்பதை விட சதமடிப்பது என்பது சற்று கடினமாகும். அதற்கு களமிறங்கியது முதலே கொஞ்சம் கூட சுணக்கம் காட்டாமல் எதிரணிக்கு கொஞ்சம் கூட கருணை காட்டாமல் ரன்களை தெறிக்க விட வேண்டும்.

- Advertisement -

அப்படி ஒரு இன்னிங்ஸ்சில் படிப்படியாக முன்னேறி அரைசதம் கடந்து சிறிது சிறிதாக ரன்களை சேர்த்து சதத்தை அடிப்பதாலேயே பேட்ஸ்மென்கள் அதை வெறித்தனமாக கொண்டாடுகின்றனர். அந்த அளவுக்கு சதம் என்பது ஒரு பேட்மேனின் மிகப் பெரிய கனவாக இருக்கும் நிலையில் 90 ரன்களை கூட அவர்கள் எளிதாக அடித்து விடுவார்கள். ஆனால் 90 என்ற ரன்களை தொட்டதும் அடுத்த 10 ரன்களை சேர்ப்பதற்குள் இயற்கையாகவே தோன்றும் பதற்றத்தால் கைகால் நடுங்குவதை போன்றதொரு உணர்வை பெற்று தடுமாறுவார்கள்.

அதிலும் 99 ரன்களை தொட்டு விட்டால் சச்சின் போன்ற எந்த ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரராக இருந்தாலும் ஒரு நிமிடம் பதற்றம் அடையாமல் இருக்க முடியாது. அந்த பதற்றத்தை தாண்டி விட்டால் அது சாதனையாகும். ஆனால் அந்த சமயத்தில் அதிர்ஷ்டமும் சற்று கைகொடுக்க தவறி சொதப்பினால் அதுவே வேதனையாக 99 ரன்களில் அவுட்டாகி பரிதாபமாக மாறிவிடும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் 99 ரன்களில் அவுட்டான பேட்ஸ்மேன்களைப் பற்றி பார்ப்போம்.

Virat Kohli 99

1. விராட் கோலி: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மன் என்ற சாதனை படைத்துள்ள விராட் கோலி கடந்த 2013இல் பெங்களூருவின் கேப்டனாக பதவியேற்ற போது டெல்லிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தனது அணிக்கு அற்புதமாக பேட்டிங் செய்த அவர் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் சதத்தை நெருங்கி 99 (58) ரன்கள் எடுத்தபோது துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 99 ரன்களில் ரன் அவுட்டான முதல் வீரர் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்ற பரிதாபத்துடன் பெவிலியன் திரும்பினாலும் அவரின் 99 ரன்களால் பெங்களூரு 183/4 ரன்கள் சேர்த்து பின்னர் 4 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

2. பிரிதிவி ஷா: குட்டி சேவாக் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் வீரர் பிரித்வி ஷா கடந்த 2019இல் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 186 ரன்கள் இலக்கை துரத்திய போது தொடக்க வீரராக களமிறங்கி சரவெடியாக பேட்டிங் செய்தார். ஆனால் இளம் வீரரான அவர் 12 பவுண்டரி 3 சிக்சருடன் 99 (55) ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக அவுட்டானார்.

Prithvi-Shaw

இறுதியில் அந்த பரபரப்பான போட்டி டையில் முடிவடைந்தாலும் சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது. ஆனால் அன்றைய நாளில் துரதிஸ்டவசமாக சதத்தை தவறவிட்ட பிரிதிவி ஷா அதன்பின் இதுவரை முதல் சதத்தை பதிவு செய்யவில்லை என்பது அவருக்கு நிச்சயம் இன்றும் உறுத்தலை கொடுத்துக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

3. இஷான் கிசான்: 2020 ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான ஒரு போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா போன்ற டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் மிடில் ஆர்டரில் களமிறங்கி பட்டாசாக வெடித்து வெறும் 2 பவுண்டரி 9 மெகா சிக்சர் உட்பட 99 (58) எடுத்து சதத்தை முத்தமிட முயற்சித்த போது இளம் வீரர் இஷான் கிசான் பரிதாபமாக ஆட்டமிழந்தார்.

அந்த போட்டியும் டையில் முடிவடைய பெங்களூரு சூப்பர் ஓவரில் வென்றது. பிரிதிவி ஷா போலவே அன்றைய நாளில் சதத்தை கோட்டைவிட்ட இஷான் கிசான் இன்றுவரை முதல் சதத்தை அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

4. கிறிஸ் கெயில்: ஐபிஎல் வரலாற்றில் 6 சதங்களை அசால்ட்டாக அடித்து அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்த சூறாவளி புயல் கிறிஸ் கெயிலையும் இந்த 99 என்ற பதற்றம் விட்டு வைக்கவில்லை.

ஆம் 2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்க்கு 3-வது வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் வழக்கம்போல 6 பவுண்டரி 8 சிக்சருடன் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தி 99 (63) ரன்கள் எடுத்திருந்தபோது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி கோபத்துடன் பேட்டை வீசி எறிந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதன்காரணமாக இப்பட்டியலில் கிரிஸ் கெயிலும் இடம்பெற நேர்ந்தது.

5. ருதுராஜ் கைக்வாட்: இந்த வருட ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிராக நடந்த போட்டியில் டேவோன் கான்வேயுடன் ஜோடி சேர்ந்த இளம் சென்னையின் தொடக்க வீரர் ருதுராஜ் முதல் ஓவரிலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 99 (57) ரன்கள் எடுத்திருந்தபோது பவுண்டரி அடிக்க முயன்று துரதிர்ஷ்டவசமாக தமிழக வீரர் நடராஜன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறினார்.

Ruturaj Kane Williamson

இருப்பினும் கான்வேயுடன் 182 ரன்கள் முரட்டுத்தனமான பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த சென்னை ஜோடி என்ற வரலாற்றை படைத்து சென்னையின் வெற்றிக்கும் பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்று மனதை தேற்றிக் கொண்டார்.

Advertisement