விராட், ரோஹித்துக்கு ஓய்வு.. ஆஸி டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி.. லிஸ்ட் இதோ

IND vs AUS t20
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது. குறிப்பாக லீக் மற்றும் செமி ஃபைனல் சுற்றில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று அபாரமான ஃபார்மில் இருந்தும் ஃபைனலில் வெறும் 240 ரன்கள் அடித்து இந்தியா தோற்றது பல கோடி ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

அதிலும் குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியும் தோல்வியை சந்தித்ததால் கண்ணீர் விட்டார்கள். மறுபுறம் வலுவான இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவித்துள்ளது.

- Advertisement -

ஈரம் காய்வதற்குள்:
குறிப்பாக அடுத்த வருடம் ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் முதல் படியாக இந்த தொடரை நவம்பர் 23 முதல் சொந்த மண்ணில் பிசிசிஐ நடத்துகிறது. இருப்பினும் உலகக்கோப்பை தோல்வியை சந்தித்ததால் கலங்கிய கண்களில் ஈரம் காய்வதற்குள் வெளியான இந்த அறிவிப்பு பல ரசிகர்களை கடுப்பாக வைப்பதாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.

அந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள இத்தொடரில் சூரியகுமார் யாதவ் இந்தியாவை வழி நடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் துணை கேப்டனாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்ற ருதுராஜ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அவர்களது தலைமையில் இசான் கிசான், ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற இளம் வீரர்கள் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வாகியுள்ளார்கள். அதே போல காயத்தால் உலகக்கோப்பையில் விளையாடாத அக்சர் படேல் தேர்வாகியுள்ள நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் தேர்வாகியுள்ளார். அத்துடன் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா, ஆல் ரவுண்டராக சிவம் துபே ஆகியோரும் பவுலர்களாக முகேஷ் குமார், அர்ஷிதீப் போன்ற இளம் வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

இதையும் படிங்க: உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்விக்கு பிறகு. தனது வருத்தத்தை பகிர்ந்த – தமிழக வீரர் அஷ்வின்

ஆனால் இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக கடைசி 2 போட்டிகளில் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணி பின்வருமாறு. சூரியகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கைக்வாட், திலக் வர்மா, இஷான் கிசான், யசஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆவேஷ் கான், முகேஷ் குமார்.

Advertisement