இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்கிய நான்காவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட் 122* ரன்கள் எடுத்த உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்து அசத்தியது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது நாள் முடிவில் 219/7 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட இன்னும் 134 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணிக்கு இதுவரை அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பசீர் 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
கேரியர் முடிஞ்சுதா:
களத்தில் துருவ் ஜூரேல் 30*, குல்தீப் யாதவ் 17* ரன்களுடன் போராடி வருகிறார்கள். முன்னதாக இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 2, கில் 38, ரஜத் படிடார் 18, ரவீந்திர ஜடேஜா 12, சர்பராஸ் கான் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி கொடுத்தனர். இந்நிலையில் உலகத்தரம் வாய்ந்த விராட் கோலி இல்லாத இந்த தொடரில் இது போன்ற சூழ்நிலைகளில் நங்கூரமாக விளையாடக்கூடிய புஜாரா இந்திய அணியில் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக ஸ்டுவர்ட் ப்ராட் கூறியுள்ளார்.
மேலும் சமீப காலங்களில் இந்திய அணியில் இல்லாத அவருடைய கேரியர் முடிந்து விட்டதா? என்றும் ப்ராட் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அனுபவம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த விராட் கோலி இல்லாத சூழ்நிலையில் இந்த இந்திய பேட்டிங் வரிசையில் புஜாராவை மீண்டும் கொண்டு வருவதற்கான ஆர்வம் ஏற்படுவில்லையா”
“அல்லது அவருடைய சர்வதேச கேரியர் முடிந்து விட்டதா? அவரால் தற்போதைய இந்திய அணியில் நங்கூரமாக மற்றும் நிலைத் தன்மையையும் விளையாடும் அணுகு முறையை ஏற்படுத்த முடியும் என்று தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார். அவர் கூறுவது போல பெரும்பாலான போட்டிகளில் நங்கூரமாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட புஜாரா சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டதால் 2023 உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுடன் கழற்றி விடப்பட்டார்.
இதையும் படிங்க: தனி ஒருவனாக போராடும் ஜெய்ஸ்வால்.. டிராவிட், கோலிக்கு நிகராக.. முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை
இருப்பினும் மனம் தளராத புஜாரா ரஞ்சிக் கோப்பையில் முடிந்தளவுக்கு சிறப்பாக விளையாடிய கம்பேக் கொடுக்க போராடி வருகிறார். ஆனால் அவரைக் கண்டுகொள்ளாத தேர்வு குழு சர்பராஸ் கான், ரஜத் படிடார் போன்ற இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கொடுத்துள்ளது. எனவே புஜாரா மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பது அசாத்தியமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.