உலக கோப்பை தொடரின் 20 ஆவது போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 334 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் பின்ச் 153 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 73 ரன்களை அடித்தார். அதன் பின்னர் 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது இலங்கை அணி.
45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்சல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிறப்பாக விளையாடி சதம் அடித்த பின்ச் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி ஒரு மோசமான உலக சாதனையை இந்திய அணியுடன் பகிர்ந்துள்ளது. அந்த சாதனை யாதெனில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக போட்டிகளில் தோற்ற அணியாக இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 417 ஆட்டங்களில் இந்திய அணி இதுவரை தோற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தோல்வியின் மூலம் இலங்கை அணியும் 417 போட்டிகளில் தோற்று முதலிடத்தை இந்திய அணியுடன் பகிர்ந்தது. அடுத்த இடத்தில் பாகிஸ்தான் அணி 412 போட்டிகளில் தோற்று இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.