நீங்களும் சாதனைக்காக விளையாடும் பாபர் அசாம் மாதிரி ஆகிட்டீங்க – நேரலையில் விராட் கோலியை விளாசிய சைமன் டௌல்

Simon Doull
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் பெங்களூருவை 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ தங்களது 3வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 212/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 61 (44), கேப்டன் டு பிளேஸிஸ் 79 (46), கிளன் மேக்ஸ்வெல் 59 (29) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவித்தனர். அதைத்தொடர்ந்து 213 ரன்களை துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் 0, தீபக் ஹூடா 9, க்ருனால் பாண்டியா 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஆனால் அப்போது களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி 65 (30) ரன்கள் குவித்து சரிவை சரி செய்து அவுட்டான நிலையில் மறுபுறம் தடவிய கேஎல் ராகுல் 18 (20) ரன்களில் நடையை கட்டினார். அதனால் கேள்விக்குறியான அந்த அணியின் வெற்றியை அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் சரமாரியாக அடித்து நொறுக்கி 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 62 (19) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்த ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் ஆயுஸ் படோணி 30, உனட்கட் 9, மார்க் வுட் 1 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை எடுத்தது பெங்களூரு வெற்றிக்கு போராடியது.

- Advertisement -

பாபர் மாதிரி:
ஆனால் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது மன்கட் செய்வதில் ஹர்ஷல் படேல் சொதப்பிய நிலையில் தினேஷ் கார்த்திக் ரன் அவுட் செய்வதில் சொதப்பியதால் லக்னோ போராடி த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருக்கு 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்து முழுமையான ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி ஆரம்பத்திலேயே அதிரடி துவக்கி விரைவாக ரன்களை சேர்த்தார்.

குறிப்பாக தனது கேரியரிலேயே உச்சகட்டமாக பவர் பிளே ஓவர் முடிவதற்குள் 42 ரன்கள் குவித்த அவர் சரவெடியாக பேட்டிங் செய்தார். ஆனால் அரை சதத்தை தொட வேண்டும் என்பதற்காக சற்று மெதுவாக விளையாடிய அவர் அடுத்த 7 பந்துகளில் 8 ரன்களை எடுத்து 50 ரன்களைத் தொட்டார். அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் தன்னுடைய சொந்த சாதனைக்காக விராட் கோலி மெதுவாக விளையாடியதாக நேரலையில் விமர்சித்தார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அதிவேக ரயிலை போல விராட் கோலி அதிரடியாக தனது இன்னிங்ஸை துவங்கினார். அவர் அடித்து நொறுக்கும் ஷாட்டுகளை அடித்தார். ஆனால் 40 முதல் 42 ரன்களில் இருந்த போது அவர் 10 பந்துகளை (7 பந்துகள்) எதிர்கொண்டு சொந்த சாதனைக்காக விளையாடினார். ஆனால் இந்த போட்டியில் அது போன்ற எண்ணத்துடன் விளையாடுவதற்கான இடமே இல்லை என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக இது போல விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல அந்த இடத்தில் சற்று விராட் கோலி மெதுவாக விளையாடியது இறுதியில் 5 – 10 ரன்கள் பெங்களூரு குறைவாக எடுத்து தோல்வியை சந்திப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பொதுவாகவே ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி பெரிய ரன்களை குவிக்கும் ஸ்டைலை கொண்டுள்ள விராட் கோலி எப்போதுமே சாதனைக்காக விளையாடாதவர் என்று யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா பற்றி நான் அப்படி சொன்னேனா? இப்படியெல்லாம் பொய் சொல்லாதீங்க ப்ளீஸ் – துஷார் தேஷ்பாண்டே விளக்கம்

முன்னாதாக சமீப காலங்களில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2023 பிஎஸ்எல் தொடரின் ஒரு போட்டியில் 83 (46) ரன்களில் இருந்த போது மெதுவாக விளையாடி அடுத்த 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து சதத்தை தொட்டது இறுதியில் அவருடைய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அப்போது சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடுங்கள் என்று வெளிப்படையாக விமர்சித்திருந்த சைமன் டௌல் தற்போது விராட் கோலியையும் நேரடியாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement