இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது இதுவரை தங்கள் விளையாடியுள்ள 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் ஐந்து லீக் போட்டிகள் இந்த தொடரில் எஞ்சியுள்ள வேளையில் அதில் இரண்டு வெற்றி பெற்றால் கூட அந்த அணி எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும் நிலையில் உள்ளது.
முதல் ஐ.பி.எல் கேப்டனாக சுப்மன் கில் எடுத்த முடிவு :
ஆனாலும் கடைசியாக ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 209 ரன்கள் அடித்தும் குஜராத் அணி தோல்வியை சந்தித்தது சற்று ஏமாற்றம் அளிக்கும் விடயமாக மாறியது. ஏனெனில் குஜராத் அணியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான், இஷாந்த் சர்மா, சாய் கிஷோர் போன்ற நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்தும் அந்த அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
அதிலும் குறிப்பாக 210 ரன்கள் என்கிற மிகப்பெரிய இலக்கினை நிர்ணயித்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களிலேயே அந்த இலக்கினை எட்டி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 101 ரன்களையும், ஜெய்ஸ்வால் 70 ரன்களையும் குவிக்க குஜராத் அணி மோசமான தோல்வியை சந்தித்திருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய குஜராத் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடியிருந்த கேப்டன் சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வேளையில் அடுத்ததாக இரண்டாம் பாதியில் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. இதன் மூலம் அவர் ஐபிஎல் வரலாற்றில் முதல் கேப்டனாக ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அந்த விடயம் யாதெனில் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது முதுகுவலி காரணமாக தானாக முன்வந்து வெளியேறி தனக்கு பதிலாக இம்பேக்ட் சப்ஸ்டியூட் வீரராக இஷாந்த் சர்மாவை கொண்டு வந்தார். அதன் காரணமாக களத்தில் இருந்த கேப்டன் வெளியேறியதால் இரண்டாம் பாதியில் குஜராத் அணியின் கேப்டனாக ரஷீத் கான் செயல்பட்டு இருந்தார்.
இதையும் படிங்க : கவுதம் கம்பீரின் அந்த தாக்கத்தை டுவைன் பிராவோவால் ஏற்படுத்த முடியவில்லை – ஹர்ஷித் ராணா வெளிப்படை
இப்படி ஐபிஎல் போட்டியின் போது கேப்டனே மைதானத்தில் இருந்து வெளியேறி தனக்கு பதிலாக இம்பேக்ட் வீரரை கொண்டு வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் டைட்டன்ஸ் அணியானது தங்களது அடுத்த லீக் ஆட்டத்தில் மே 2-ஆம் தேதி சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.